Friday, December 30, 2005

2005

இந்த வருடத்தின் கடைசிப் பதிவு இது. 2005-ல் ஏகப்பட்ட இயற்கைச் சீரழிவுகளைப் பார்த்தாயிற்று. 2006 நல்ல படியாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

நேற்று பி.பி.ஸியில் டாம்ப் ரைய்டர் பார்த்தேன். ஏஞ்சலினா அம்பாள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார். மனதில் ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தியாயிற்று. என்னம்மா நடிச்சிருக்கா குழந்தை. இங்கே ப்ளாகில் ஒரு ஓரமாய் நான் மட்டும் பார்க்கிற மாதிரி போடுவதற்கு அன்னாரின் நல்ல படம் இருந்தால் அனுப்பி வையுங்கோ. நன்றி ஹை.

யாரோ சென்னையிலிருந்து(203.101.40.10) மனோ என்ற புண்ணியவான் முப்பதிலிருந்து நாற்பது வரை உள்ள பெண்கள் வேண்டும் என்று சைடில் இருக்கும் Current Crisis செக்க்ஷனில் கேட்டுள்ளார். எண்ணிக்கையைச் சொல்கிறாரா இல்லை வயதைச் சொல்லுகிறாரா என்று தெரியவில்லை. இன்னும் இது ஒன்னு தான் பாக்கி. நல்லாயிருடா ராசா...ஏற்கனவே நிறைய பேர் சரோஜாதேவி புஸ்தகங்களைத் தேடி வருகிறார்கள் அதோட இது வேறயா...ஹூம்

நிற்க முன்னமே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். donthecat கேன்ஸர் நோய் விழிப்புணர்வுக்காக ஒரு ப்ளாக் போட்டி நடத்தி வருகிறார். மிக நல்ல விஷயம். ஆர்வமிருப்பவர்கள் பங்கு பெற்று வெல்ல வாழ்த்துக்கள். பங்கு பெறாவிட்டாலும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இதைப் பற்றிச் சொல்லலாம். அதறகான சுட்டி இங்கே...

நம்ம பஸ்பாஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை சேகரிக்கும் ஒரு தானியங்கி வலைப் பதிவு தளத்தை நடத்தி வருகிறார். அதன் சுட்டி இங்கே..
(பஸ்பாஸ் - நம்ம டுபுக்கு பதிவு மட்டும் எப்போதும் மேலே டாப்பில வர்ற மாதிரி எதாவது செய்யமுடியுமா? :P )

பொங்கல் பார்ட்டி ஜனவரி 15ம் தேதி என்று முடிவாகி வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம் மிலடன் கீய்ன்ஸ். ஆர்வம் இருப்பவர்கள் தெரியப் படுத்தவும். மேலும் விபரங்களைத் தருகிறேன். தலைக்கு பத்து பவுண்டு நுழைவு கட்டணம்.(பெரியவர்களுக்கு).

மற்றபடி 2006 அமைதியையும், சந்தோஷத்தையும், எல்லா வளங்களையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கொண்டு வர வாழ்த்துக்கள்.

Wednesday, December 28, 2005

Alma மேட்டர் - 2

for previous parts --> part1

முதல் நாள் ஸ்கூல் அனுபவம் நியாபகம் இல்லை. ஆனால் அந்த ஸ்கூல் எல்.கே.ஜி யூ.கே.ஜி நியாபகங்கள் கொஞ்சம் இருக்கின்றன. முதல் ஸ்கூல் அப்பிடி ஒன்றும் பெரிய ஸ்கூலில்லை. கொஞ்சம் நீளமான வீட்டில் நடத்தி வந்தார்கள். அடுத்த தெருவில் இருந்ததால் அம்மாவுக்கு கொண்டு விடுவதற்கு வசதியாக இருக்கும் என்று சேர்த்தார்கள் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது. இளங்கலை முடித்து விட்டு வரும் பெண்களே டீச்சர்கள். அவர்களுக்கும் வீட்டில் கல்யாணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அதுவரைக்கும் சும்மா இருக்கவேண்டாமே என்று இங்கு வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். கையில் பிரம்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்ப்பவர்கள், மற்றவர்களெல்லாம் மர ஸ்கேல் வைத்திருப்பார்கள்.

நான் பள்ளிக்குப் போவதற்கு ரொம்ப அழமாட்டேனாம். ஆனால் அழாமல் அடிக்கடி மட்டம் போட்டுவிடுவேனாம் அம்மா சொல்லி இருக்கிறார்கள். அடுத்த தெரு தானே, மத்தியானம் சாப்பாட்டுக்கு அம்மா இடுப்பில் வைத்துக் கொண்டுவருவார்கள். முதலில் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டு விடுவார். பிறகு அம்மா சாப்பிட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு வருவதற்க்குள் சமத்தாக தூங்கிவிடுவேன். அவர்களும் எழுப்பிப் பார்ப்பார்கள்...சில நாள் குழந்தையை எழுப்ப மனசு வராமல் சின்ன க்ளாஸ் தானே என்று அப்பிடியே தூங்க விட்டுவிடுவார்கள். என்னவோ இந்த டெக்னிக் நன்றாக மனதில் பதிந்து விட்டது. இப்பவும் மனைவி ஷாப்பிங்க்கு கூப்பிடும் போது சில சமயம் இந்த உத்தி கை கொடுக்கும்...முதலில் கட கடவென்று சாப்பிட்டு விட்டு தங்கமணி வேலையை முடித்துவிட்டு வருவதற்கு முன் நான் உட்கார்ந்து கொண்டே தூங்கிவிடுவேன். ஒரு இருமுறை பச்சாதாபம் ஒர்க் அவுட் ஆச்சு அதற்கப்புறம் உதை தான் என்றான பின்...குழந்தைகளை தூக்கம் பண்ண முயற்சி செய்ய..இப்போதெல்லாம் ஷப்பிங் போய்விட்டு வந்தப்புறம் தான் சாப்பாடே போடுகிறார் தங்கமணி.

அந்த முதல் ஸ்கூலில் ரொம்ப பிடித்த விஷயமே "ஸ்கூல் டே" தான். வெளியே கல்யாணம் மாதிரி பந்தல் போட்டு ஒலிபெருக்கியை அலற விட்டு கோலாகலாமாக நடக்கும். இடுப்பில் கை வைத்துக் கொண்டு தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டு ஒரு அரத இங்கிலீஸ் ரைம்ஸ் ஆட்டம் கண்டிப்பாக இருக்கும். இது போக "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தா" பாட்டுக்கு ஆணகளும் பெண்களுமாக க்ருப் ஆட்டமும் கண்டிப்பாக இருக்கும். பாட்டின் நடுவில் இரண்டு பேருக்கு வேஷ்டி அவிழ்ந்து திரு திருவென்று முழித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களை மிஸ் வந்து தர தரவென்று இழுத்துக் கொண்டு போவார்கள். மிஸ் டான்ஸ் சொல்லிக் குடுப்பது அழகாக இருக்கும். "கையில காசு வாயில தோசை" என்ற பாடலுக்கு கையைக் காட்டிவிட்டு காசு மாதிரி சுண்டிக் காட்டவேண்டும். அப்புறம் வாயை ஆ காட்டி விட்டு கையால் தோசை வார்க்கவேண்டும். நான் "கட்டித் தங்கம் வெட்டி எடுத்து" என்ற பாடலுக்கு ஆடினேன். கட்டிக்கு கையை பாறாங்கல் மாதிரி வைத்து விட்டு தங்கதிற்க்கு காதில் தோடைக் காட்டிவிட்டு மம்பட்டியால் கஷ்டப்பட்டு வெட்டி எடுத்தேன்.

நாடகத்தில் கட்டப்பொம்மன் கண்டிப்பாக வருவார். ஜாக்ஸன் துரைக்கும், ராஜா ராணியாக நடிக்கும் சீனியர் ஆர்டிஸ்டுகளுக்கு மட்டும் தான் ரோஸ் பவுடர். மற்றவர்களுக்கெல்லாம் வீட்டில் போடும் அதே பான்ட்ஸ் பவுடர் தான். எனக்கு ஒரு முறை கூட ரோஸ் பவுடர் கிடைக்கவில்லை.

இந்த ஸ்கூலில் எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் நெல்லிக்காய் மரம். மிக புளிப்பான அருநெல்லிக்காய். ஆனால் ஸ்கூல் வாட்ச்மேன் அந்த மரம் பக்கமே போக விட மாட்டார். கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும் கீழே விழுந்த நெல்லிக்காய்களை யாரும் பார்க்காத போது ஓடிப் போய் பொறுக்கிவருவதே மிகத் துணிச்சலான விஷயம். ஆனால் இந்த ஸ்கூலிலிருந்து வெளியே வந்து வாலு முளைத்த அப்புறம் வானரப் படையோடு போய் வாட்ச் மேனையும், மரத்தையும் பாடாய் படுத்தி இருக்கிறேன்.

இந்த ஸ்கூலில் படித்தது இரண்டு வருடங்களே ஆனாலும் ரொம்ப சமத்தாக இருந்தேன்.ஒரே ஒரு முறை மட்டும் எல்லாரையும் ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போய்விட்டு வரும் போது வழியில் வீடு வந்துவிட்டதே என்று க்யூவிலிருந்து வீட்டிற்க்குள் நழுவிவிட்டேன். அங்கே ஸ்கூலில் என்னை தேடு தேடுவென தேடி விட்டு வாட்சுமேன் வீட்டில் லபோ திபோவென்று அப்பா அம்மாவிடம் குற்றப் பத்திரிக்கை படித்தார். அடுத்த நாள் ஸ்கூலில் மிஸ் காதைப் பிடித்து திருகினார்.

இந்த கால கட்டத்தில் தான் எஙகள் ஊரில் இன்னொரு பள்ளி கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்தது. கான்வென்ட் டைப்பில் ஆரம்பித்து ஸ்கூல் ஷூ, சாக்ஸெல்லாம் போட்டுக் கொண்டு பையன்கள் வேனில் போவதைப் பார்த்து எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது. அப்பா அம்மாவும் பையன் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்தால் இங்கிலீஸில் பொளந்து கட்டி ப்ளாக் ஆரம்பித்துவிடுவான் என்று நம்பியதால் என்னை சேர்க்க ஆசைப் பட்டார்கள். அப்பா சென்று விசாரித்து வந்து தலையில் குண்டைப் போட்டார். அந்தப் பள்ளியில் சேருவதற்கு டெஸ்ட் எழுத வேண்டுமாம். அதுவும் இங்கிலீஸ் மற்றும் மேத்ஸ் பரீட்சைகள் வேறு. வீட்டில் அக்கா பெண்டை நிமிர்த்தி விட்டார். நம்ம பெயரில் ஆங்கில எழுத்துக்களில் ரெண்டு மட்டும் குறையும் அவ்வளவு தான். ஆங்கில எழுத்துக்களில் ஒழுங்கான வரிசை ஒன்று, பெயருக்கு ஒரு வரிசை என்று எழுதப் படிப்பதற்குள்ளே எனக்கு அந்த ஸ்கூல் மோகம் குறைய அரம்பித்துவிட்டது. தேர்வுப் பரீட்சையில் பக்கத்திலிருந்து மண்டையில் குட்ட அக்கா இல்லையாதலால் மானாவாரியாக தோன்றியதை எழுதினேன்.

தேர்வுப் பரீட்சை முடிவுகள் வெளிவந்து, குட்டியாகப் பெயர் வைத்துக் கொண்டிருந்த தெருவிலிருந்த மற்ற இரண்டு நண்பர்களும் தேர்வாகி இருக்க, நான் மட்டும் எங்கம்மா சொல்லுகிற மாதிரி பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல். "அதென்ன பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் ...ஃபெயில் சொல்லுங்கோம்மா" என்று இன்றளவும் என் மனைவி மாமியாரிடம் இந்த விஷயத்தில் தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என் அம்மாவும் "ஃபெயில் இல்லைடி ...குழந்தை நன்னாத் தான் படிச்சான்...பரக்கப் பார்த்ததுல பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் அவ்வளவு தான்" என்று விட்டே குடுக்காமல் சமாளித்துவருகிறார். ஹூம் எங்கம்மா மட்டும் எனக்கு டீச்சராக வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

-தொடரும்

Tuesday, December 20, 2005

சினிமா சினிமா

எந்தப் படுபாவி கண்ணப் போட்டானோ...எல்லாம் கிடக்க கிழவியத் தூக்கி மனையில வைன்னு என்ன நட்டநடு இடத்துக்கு ஆபிஸில இடம் மாத்திவிட்டார்கள். அப்பப்போ பார்க்கும் ப்ளாகை கூட (??!!) இப்போயெல்லாம் பார்க்கமுடியவில்லை. ட்ரெயினில் வேறு இரண்டு நாளாக இடம் கிடைக்கவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக யெக்கோவ் புண்யத்தில் யவன ராணி படித்து வருகிறேன். சாண்டில்யன் சும்மா கலக்கு கலக்குன்னு கலக்கியிருக்கிறார். படித்து முடித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன். கண்டிப்பாக ஒரு காதல் கதை எழுத முயற்சிக்கவேண்டும் என்று இருக்கிறது.

"தவமாய் தவமிருந்து" பார்த்தாகிவிட்டது. ரசித்து எடுத்திருக்கிறார் சேரன். ஆனால் சில இடங்களில் வேண்டுமென்றே ரொம்ப இழுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஹீரோயின் பாத்திரத்துக்கு படு பாந்தமாய் இருக்கிறார். சேரனை விட ராஜ்கிரண் நடிப்பு தான் மிகப் பிடித்தது. சரண்யாவும் நன்றாக நடித்து இருக்கிறார். லேசாக தொண்டை கட்டின மாதிரி இருக்கும் அவருடைய குரல் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருக்கிறது. "பேரு வைக்கிறான்பாரு குசுப்பூ கூரப்பூன்னு" சொல்லும் போது இயல்பாக இருக்கிறது.

ஏ.பி.சி.டி படமும் பார்த்தாகிவிட்டது. ஆரம்பித்த வேகம் எதிர்பார்ப்பை கிளப்பி விட ஆனால் படம் அப்புறம் தொய்வடைந்துவிடுகிறது. படத்தில் ஷ்யாம் நன்றாக நடித்திருந்தாலும் , படத்தில் எல்லாரும் எப்பவும் என்னம்மோ கடன் கேக்கிற மாதிரி மிகவும் தாழ்வான குரலிலேயே பேசுகிறார்கள். சில இடங்களில் சகிக்கல. மற்றபடி படம் தேவலை ரகம்.

சிவகாசி வேற பார்த்துத் தொலைத்தேன். ஒரு பவுண்டு போன ஜென்ம கடனாயிருக்கும். மத்தபடி படம் தெண்டம். விஜய் படத்தின் சம்பிரதாயப் படி இந்தப் படத்திலும் ஹீரோயின் அசின் காலை கோணலாக வைத்துக் கொண்டு ஒரு குத்தாட்டம் ஆடுகிறார். கஜினியில் ஆடிய குட்டியா இதுன்னு தலையில அடிச்சிக்கலாம் போல இருக்கிறது.

கண்ட நாள் முதல் படமும் பாட்டும் நல்லாயிருக்கு. லைலா நன்றாக நடித்திருக்கிறார். பிரசன்னா நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அனேகமாக இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு வில்லனாகிவிடுவார் என்று நினைக்கிறேன். வூட்டுல கொஞ்சம் ஜொள்ளிங்ஸ்.(இன்னும் ஒத்துக்கலை) அய்யோ பாவம் அலைபாயுதே யு.யெஸ் மாப்பிள்ளை இதிலும் அதே யூ.யெஸ் அதே மாதிரி பெண் பார்த்து இந்த தரமும் கோட்டை விடுகிறார். அடுத்த படத்திலாவது கல்யாணமாக வேண்டும் என்று வீட்டில் தங்கமணி வேண்டிக் கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் தமிழ் சினிமாவில் தரம் கொஞ்சம் இறங்கி இருக்கிறது. இவ்வளவு படத்திலும் ஒரு ஹீரோயின் கூட மனதில் தங்கவில்லையே...சே என்னைய்யா படம் எடுக்கறீங்க...

Thursday, December 15, 2005

இங்கிலாந்துப் பிரதாபங்கள்...2

for previous part click here

எனக்குப் பிடித்த இங்குள்ள இன்னொரு விஷயம்...மக்களிடம் உள்ள நட்புடன் சகஜமாக பழகும் ஸ்னேக பாவம். தெருவில் நடந்து போகும் போது முன்னப்பின்ன தெரியாத நபர்கள் அதிகாலையாய் இருந்தால் காலை வணக்கங்கள் சொல்லுவார்கள்.
நானும் சொல்லிப்பார்போமே என்று நிறைய தடவை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு சினேகமான புன்னகையாவது பரிமாற்றிக்கொள்வார்கள். குற்றமாகச் சொல்லவில்லை நம்மூரில் டிப்டாப்பாக ட்ரெஸ் பண்ணிக்கொண்டாலும் இப்பிடி யாராவது செய்தால் கடன் கேக்க வந்திருக்கானோ அல்லது ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பானோ என்ற சந்தேகம் வரலாம். இங்கே வந்த புதிதில் எனக்கும் இருந்த்து. இல்லை இங்கெல்லாம் இது சகஜம் என்று உரைக்க சிறிது நாளாயிற்று. நம்மூரிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

வேறு சில பேரிடம் இந்த சினேகபாவம் அதீதமாக இருக்கும். விட்டால் மடியில் ஏறி உட்கார்ந்துவிடுகிற நட்பு இருக்கும். நேரம் தெரியாமல் இப்பிடி மாட்டிக்கொண்ட அனுபவமும் உண்டு. ஒரு முறை தங்கமணி(அதாங்க வீட்டு அம்மணி சும்மா அக்னிநட்சத்திரம் பாணியில் இப்பிடி தான் சொல்லிக்கொள்வேன்) பக்கத்துக் கடைக்குப் போயிருக்க நான் வெளியில் பையுடன் காத்துக்கொண்டிருந்தேன். ஏடாகூடமான் பெண்மணி ஒருவர் என்னைப் பிடித்துக்கொண்டு பேச்சுக் குடுக்க ஆரம்பித்துவிட்டாள். வானிலைப் பற்றி பேசாமல் ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டாள். எனக்கு அந்தப் பெண்ணைடமிருந்து விடுபட்டால் போதும் என்று ஆகிவிட்டது. "பலான பெண்ணுடன் பாகவதமா பேசுவான்" என்று நாக்கிலே பல்லைப் போட்டு யாரும் பேசிவிடக்கூடாது பாருங்கள். தங்கமணி வேறு செருப்புக் கடைக்குப் போயிருந்தார், அவர் பார்த்து டென்ஷனாகி விட்டால் என்னாவது. அப்புறம் அந்த பரதேவதையை "நெக்கு கல்யாணமாயிடுத்து போயிட்டு வாடியம்மா" என்று அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

எனக்கு இந்த ஊரில் பிடிக்காத ஒரு விஷயம் (இப்பிடித் தான் சொல்லிக்கறது) சபையில் சொல்வதற்கு கொஞ்சம் லஜ்ஜையாகத்தான் இருக்கிறது.(அடேங்கப்பா) ஏடாகூடாமாக் இருந்தால் மன்னித்துவிடுங்கள். இரவு பகல் என்று பார்க்காமல் ஆண்களும் பெண்களும் ரோட்டிலேயே எல்லாவற்றையும் அரங்கேற்றுவது. மேற்கத்திய கலாச்சார நாடுகளில் குழந்தைகளுடன் இருக்கும் யாருக்கும் இதிலுள்ள கஷ்டம் தெரியும். என் குழ்ந்தை டி.வியில் வாயில் முத்தம் குடுப்பதைப் பார்த்தாலே பேட் என்று சொல்லுவாள். பஸ்ஸில் ஒரு முறை பக்கத்தில் இது அரங்கேற...நான் சுதாரிப்பதற்குள் அவனைப் பார்த்தே "பேட் பாய்.." என்று சொல்லிவிட்டாள். அப்புறம் காக்கா பாரு குருவி பாரு என்று சமாளித்தேன்.
இது இப்போயெல்லாம் ரொம்ப ஓவராகத் தான் போய்விட்டது. செய்தித் தாளில் படித்த ஒரு விஷயம். இரவு 8 மணிக்கு லண்டனிலிருந்து நெடுந்தூரம் போகும் ஒரு ரயிலில் ரொம்பக் கூட்டமில்லாத ஒரு கம்பார்ட்மென்ட்டில் இரு காதலர்கள் அமர்ந்திருந்தார்களாம். அடிக்கிற குளிரில் ஐய்யோ பத்திக்கிச்சு என்று எல்லமீறி எல்லாவற்றையும் அங்கேயே அரங்கேற்றி விட்டார்கள். அங்கே இருந்த மற்றவர்கள் யாரும் எதுவுமே சொல்லவில்லையாம்...எல்லா ஆட்டமும் ஆடி முடிந்து ஒய்யாரமாக இருவரும் சிகிரெட்டைப் பத்த வைத்தார்களாம். இருக்கிறவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து..."ஏன்டா என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...ட்ரெயினில் சிகிரெட் பிடிக்கக் கூடாதென்று தெரியாது உங்களுக்கு?" என்று ரோஷமாகக் கேட்டார்களாம். எப்பிடியிருக்கு கதை. கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொண்டு ஊருக்கு ஓடிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள மற்றொரு சுவாரசியமான விஷயம் பேய்கள். உலகத்தில் எல்லா நாடுகளையும் விட இங்கிலாந்து தான் பேய்களுக்குப் பெயர் போன நாடு. இங்கு "கெண்ட்" என்ற பகுதி, பேய்களின் சரணாலயமாகத் திகழ்கிறது. இங்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக 12 பேய்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த வல்லுனர்களின் ஜோலி என்ன? "கண்டேன் பேயை" என்று யாராவது ஆனந்தக் கூக்குரலிட்டால்...யாரு எந்தப் பேய்...இது புதுசுதானா இல்ல முன்னாலேயெ அட்டென்டென்ஸ் போட்ட பேய் தானா...தனியா வந்துச்சா..இல்ல கூட்டமா வந்து ரவுசு விட்டுச்சா.. என்ன சேட்டை பண்ணிச்சு இதெல்லாம் அலசி ஆராய்ந்து பதிவு பண்ணி புஸ்தகம் போட்டு சம்பாதிக்கிறார்கள்.(என்னடா இது பேய்ப் பொழப்புடா இது இதுக்கு நாண்டுக்கிட்டு செத்து பேயா அலையலாம்).

இந்தப் பேய்ப் பிரியர்கள் இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியையும் இதில் உபயோகப்படுத்தி ஆதாரமெல்லாம் சேகரிக்கிறார்கள். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு புகையான உருவத்தோடு போட்டோவை பேப்பரில் போட்டு இது பேயா இல்லைப் போர்வையைப் போட்டுக் கொண்டு உலாத்தும் ஏதாவது தெனெவெடுத்த நாயா..என்று பட்டிமன்றமெல்லாம் வைத்தார்கள்.
இதுல டமாசு என்னவென்றால் ஒரு பணக்காரப் பேய்...குதிரைவண்டி பூட்டிய சாரட்டு வண்டியில வலம் வருதாம். பேய்க்கு வந்த வாழ்வப் பாருடா...பேயானாலும் இப்பிடியில்ல பேயானும். இன்னொரு பேய் என்னடான்னா நம்ம தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி காரில் சாவாரி கேட்டு பின்னாடி உட்கார்ந்துட்டு அப்புறம் பாதி வழியில் மறைஞ்சுடுதாம். பேயானாலும் ஓசி சவாரி புத்தி போகல போல. நம்மூர்ல இருக்கற மாதிரி கோழிப் பிரியாணி கேக்கற பேய்கள் எதுவும் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் வசதியான பேய்கள் போல. பேயோட்டுறவங்களும் இந்த்ப் பேய்களோடு கதாட்சத்தால கிடா மீசையும் கொடுவா பார்வையும் பார்காமல் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு நாசூக்காய் திரிகிறார்கள். ஏன் தான் மக்கள் பேயப் பார்த்து பயப்படறாங்களோ...நாங்களெல்லாம் கல்யாணம் பண்ணி குடித்தன்மே நடத்தலையா?
இதெல்லாம் உண்மையோ பொய்யோ...கின்னெஸ் புஸ்தகத்துல போட்டு...இதையும் சுற்றுல்லா பக்கங்களில் போட்டு அரசாங்கம் நல்ல துட்டு பார்க்குது. (ஹூம் பணம் பணம்ன்னு ஏன் தான் இப்பிடி பேயா அலையறாங்களோ)
சரி சரி பேய்க்கதை போதும். உங்களுக்கு இன்னும் தெரிஞ்சிக்கனும்ன்னா இங்கே போய்ப் பாருங்கள். ஒருவேளை நீங்க கல்யாணமாகத பிரம்மச்சாரியா இருந்து இதெல்லாம் படிச்சுட்டு பயந்துட்டீங்கன்னா ராத்திரி உம்மாச்சிய கும்பிட்டுட்டு தாச்சிக்கோங்க...இல்லைன்னா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க...பழகிடும்.

Wednesday, December 14, 2005

இங்கிலாந்துப் பிரதாபங்கள்...1

*********************************
முன் குறிப்பு - உங்களில் வெண்டைக்காய் சாப்பிட்டு நியாபகமாய் இருக்கும் புத்திசாலிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் நானே சொல்லிவிடுகிறேன். இந்தப் பதிவு ஒன்றரை ஆண்டுகள் முன்னால்(May 2004) நான் வலைப்பூவில் ஒரு வார ஆசிரியராக இருந்தபோது எழுதியது. கொஞ்சம் திருத்தியிருக்கிறேன். மதியும் காசியும் நான் அங்கே எழுதியதை இங்கே மறுபதிப்பு போட்டதுக்கு ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் போட்டிருக்கிறேன்(அப்பிடித் தானே :)). Alma மேட்டர் தொடர் அப்பிடியே காற்றில் விட்ட படி இருக்கிறது...நியாபகமிருக்கிறது...ஆனால் கொஞசம் வேலை மென்னியப் பிடிக்கிறது. ரெண்டு நாள் பொறுங்கோ எழுதிவிடுகிறேன்..
*********************************

இங்கிலாந்து என்று சொன்னால் உங்களுக்கு என்ன நியாபகம் வரும்? ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசித்துவிட்டுத் தொடருங்கள்.

லண்டன் பிரிட்ஜும், பிக் பென்னும், சிவப்பு ரெட்டை மாடி பஸ்ஸும் நியாபகத்துக்கு வந்தால் நீங்கள் இளம் வயதினர்.

ஷேக்ஸ்பியரும், மாடம் துசாட்ஸ் மெழுகுச்சிலை மியூசியமும், கோகினூர் வைரமும், குட்டைப் பாவாடை வெள்ளைக்காரபெண்களும் நியாபகம் வந்தால் ஒரு வேளை பெண்ணாய் இருக்கக்கூடும்

ஸ்காத்லாந்தும் மதுவும் நியாபகத்துக்கு வந்தால் இங்கு ஒரு முறையாவது வந்து போயிருப்பீர்கள்...

டவர் ஆப் லண்டன், லண்டன் ஐ, மாடம் துசாட்ஸ் மெழுகுச்சிலை மியூசியம் இவை நியாபகத்துக்கு வந்தால் இங்கு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் குடும்பஸ்தராக இருக்கக்கூடும்.

லண்டன் பிரிட்ஜ், பங்கிங்காம் அரண்மனை, டயானா, டைடானிக் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நியாபகம் வந்தால்..கல்யாணமானவராக இருக்கக்கூடும்.

டயானாவும், டோனி பிளேரும், பழ்ங்கால இங்கிலாந்து உடையில் உள்ள பெண்களும் நியாபகத்துக்கு வந்தால் நீங்கள் கல்யாணமாகாத பிரம்மச்சாரியாக இருக்கலாம்,

பெக்காம், மீரா சாயல் லிஸ்டில் இருந்தால் நீங்கள் ஜொள்ளுகின்ற பெண்ணாய் இருக்கலாம் ;)

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், அழகான வெள்ளைக் கார குட்டிகள், ஸ்காட்லாந் மது, சமீபத்திய குண்டு வெடிப்பு ஆகியவை நியாபகத்துக்கு வந்தால் நீங்கள் கல்யாணமான ஆணாக இருக்கக் கூடும்.

மேற்சொன்ன எதுவுமே இல்லாவிட்டால் நீங்கள் எழுத்தாளராகவோ பிஸினெஸ்மேனாகவோ இருக்கலாம். :)

இதெல்லாம் இல்லாமல் ஸ்காத்லாந்து யார்ட் போலீஸ் மட்டும் நியாபகத்துக்கு வந்தால்...அட போங்கய்யா...பேசாம வீட்டுல இழுத்துப் போர்த்திண்டு தாச்சிக்கலாம்.

(ஜோஸ்சியம் பலித்ததென்றால் சொல்லுங்கள்...இங்கே ஒரு கடையைத் தொறந்துவிடுகிறேன் :P)

மேற்சொன்ன அத்தனை விஷயங்களைப் பற்றியும் திகட்ட திகட்ட கேட்டிருப்பீர்கள். அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு சும்மா உப்பு பெறாத சில விஷயங்களை சொலட்டுமா?

இங்கிலாந்து வந்து அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் அப்போது தான் அறிமுகமான இரண்டு பேர் நான் இருக்கும் அறையில் பேசிக் கொண்டிருந்தார்கள்

"நேத்திக்கு 13 போச்சு...தெரியுமா?"

"அப்பிடியா நாளக்கு 10 தான் போகுமென்று சொன்னார்கள்"

"இன்று காலை 10 மணி வரை 7 தான் இருந்தது. 1 மணிக்கு எப்பிடித்தான் 15க்குப் போகுமோ தெரியவில்லை"

என்னத்தப் பத்தி இப்பிடி பேதி மாத்திரை சாப்பிட்ட மாதிரி பேசறாங்க...ஒரு வேளை பங்குச் சந்தை பற்றி இருக்குமோ என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரம் கவனித்த பிறகு தான் புரிந்தது.

"வாரக்கடைசியில் மழை பெய்யுமென்று சொல்கிறார்கள்...பாழாய்ப்போன மழை.."

அடப்பாவிங்களா வானிலையைப் பற்றியா இப்படி ஒரு மணி நேரமா பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நம்மூரில் தான் பேசுவதற்கு ஒன்றுமில்லையென்றால் "இங்கு வெய்யிலடிக்கிறது அங்கு வெய்யிலடிக்கிறதோ" என்று சும்மானச்சுக்கும் கலாசுவார்கள் . இதெல்லாம் இங்கு முக்கியமான விஷயம். வானிலையைப் பற்றிப் பேச யாரையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. "இன்னிக்கு மழை பெய்யும்ன்னு சொன்னானா?"என்று அழகான வெள்ளகாரக் குட்டிலேர்ந்து பாட்டி வரை யாரிடம் வேண்டுமானாலும் கடலை போடலாம். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் இங்கே வானிலையும் அப்பிடித்தான் இருக்கிறது. குளிர் அந்தந்த காலங்களுக்கேற்ப இருந்தாலும் எப்ப மழை பெய்யுமென்று சொல்லவே முடியாது. வெகு சில நாட்களே காலங்களுக்கேற்ப ஊகிக்க முடியும். மத்த நாளெல்லாம் இவங்க சொல்லற மாதிரி "ப்ளடி பிரிட்டிஷ் வெதர்" தான். ஒரு நாள் இப்பிடி தான் முந்தின நாள் குளிரியதே என்று தடியான கோட்டைப் போட்டுக் கொண்டுபோக...அன்றைக்கு ரம்மியமாக இருந்தது. நான் கோட்டுகுள்ளே போட்டுக்கொண்டிருந்த சட்டைக்குள்ளே போட்டுக்கொண்டிருந்த பனியனில் மட்டும் நாலு குட்டிகள் மொத்தமாய் டிரஸ் தைத்துப் போட்டுக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் அவ்வளவு ஆடைகளையும் போட்டுக் கொண்டு நடக்க வெட்கமாக இருந்தது. இப்பெல்லாம் நாங்களும் வெள்ளக்காரன் மாதிரி வானிலை பற்றி அடிக்கடி பேசுகிறோம்.

ஒருமுறை ரோமன் முறைப்படி எழுத்துக்கள் கொண்டிருந்த ஒரு கடிகாரத்தைப் பற்றி ஒரு நண்பர் சுவாரசியமான தகவல் சொன்னார். ரோமன் முறைப்படி நாலு என்பதை "IV" என்று தான் போடவேண்டும். ஆனால் இங்கிலாந்தில் மட்டும் ஒரு காலத்தில் "IIII" என்று போட்டுக்கொண்டிருந்தார்களாம். காரணம் என்னவென்றால்..ஒரு ராஜா ஒருமுறை ஸ்பெஷலாக கடிகாரம் செய்யச் சொன்னாராம். கடிகாரம் செய்தவன் கரெக்டாக "IV" என்று போட்டுக் கொண்டுவந்து காமித்தானாம். இந்த ராசா பள்ளிக்கூடத்தில் படிக்காமல் கழுதை மேய்த்திருப்பார் போல...நாலு "IIII" இப்பிடித்தான் போடனும் என்று திருத்தச் சொன்னாராம். அவனும் ராசா சொல்லறார் நமக்கேன் வம்பு என்று அப்பிடியே போட்டுக் கொண்டுவந்தானாம். இதைப் பார்த்து மற்ற எல்லோரும் பயந்து போய் அப்பிடியே போட ஆரம்பித்தார்களாம். இப்பிடியாக எல்லாம் தெரிந்த ராசா ஏதோ விட்ட கதையாக...தப்பாய் போட்டதையும் தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள். இப்போது பன்னாட்டுச் சந்தையிலிருந்து பொருட்கள் வருவதால் எல்லா கடிகாரங்களும் இப்பிடி வருவதில்லை ஒரு சில ஸ்பெஷல் கடிகாரங்கள் மட்டும் இப்பிடி என்று நண்பன் சொன்னான்.

என்ன இருந்தாலும் பழமைகளைப் போற்றிப் பாதுகாப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான். கட்டடம் கட்டுவதில் ஆதியிலிருந்து மிகவும் திறமைவாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். 1700/1800-களில் கட்டிய கோட்டைகள் துளியும் சேதமில்லாமல் இன்றும் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கின்றன. சமீபத்தில் 1750-ல்கட்டிய வீடு ஒன்று விலைக்கு வந்ததையும் டி.வியில் பார்த்தேன். 1750ல் கட்டப்பட்டது என்பதற்காக விலையில் சகாயமெல்லாம் இல்லை. எங்க வீடு 1900- 1940-ல் கட்டப் பட்ட வீடு.ஆனா இந்த விஷயத்த ஊர்ல சொல்ல...சொன்னா "நீதான்டா ஒரிஜினல் டுபுக்குன்னு" பாராட்டுவாங்களேன்னு தான். வீட்டில் சுவற்றில் இன்றும் ஆணியடிக்க திணறத்தான் வேண்டி இருக்கு. ராணி விக்டோரியா காலத்தில் கட்டிடங்களுக்கு இன்றும் மிக்க மதிப்பு இருக்கிறது(எங்க வீடும் விக்டோரியன் பில்டிங்). விக்டோரியாவோ கிக்டோரியாவோ...ஆணியடித்து தேதி பார்க்கும் காலண்டர் ஜோராய் மாட்டாவிட்டால் கை நமநம என்று அரிக்கிறது.
- அடுத்த பதிவில் இ.பிரதாபங்கள் முடியும்

Monday, December 12, 2005

லண்டனில் பொங்கலோ பொங்கல்

தீபாவளி பார்ட்டியின் வெற்றியைத் தொடர்ந்து...பொங்கலுக்கும் மீண்டும் சந்திக்கலாம் என்று முடிவாகியிருக்கிறது. இந்த முறை கல்லாவை காலியாக்கும் பொறுப்பை உமாவும், தீபாவும் ஏற்றுக்கொண்டு பொறுப்புகளை மேற்பார்வை பார்த்துவருகிறார்கள் (அவங்க வூட்டுல வூட்டுக்காரர் பெண்டு நிமிருத்துன்னு ஸ்காட்லாண்ட் யார்ட் ரகசிய அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்..கிருஷ்ணா, ராம்கி அப்பிடியா :P )

"மகளிர் மட்டும்" அணி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பழிவாங்கும் விதமாக ஹிருத்திக் ரோஷன் போன்ற மீசையில்லா வாழைக்காய் பஜ்ஜிகளை விழாவில் பார்க்கும் பாக்யம் கிட்டலாம். சூர்யா வந்தாலும் சந்தோஷமே (கூடவே ஜோதிகாவும் வருவாங்கள்ல?)

இப்பிடி அடிக்கடி பார்ட்டி நடத்தி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, சிங்கப்பூர் மற்றும் கோபால் பல்பொடி நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி யூ.கே ப்ளாக் வட்டத்தில் முதல் இடத்தில் வெற்றிக் கொடி கட்டுகிறது.

இங்கிருப்பவர்களும், இங்கே பொங்கல் சமயத்தில் வரப் போகிறவர்களும் இந்த பார்ட்டிக்கு வர விருப்பப் பட்டால் மேலும் விபரங்களுக்கு எனக்கு(r_ramn at yahoo dot com) ஒரு மெயில் அனுப்புங்கள்.

Friday, December 09, 2005

தேசி பண்டிட்

தேசி பண்டிட் பற்றி உங்களில் நிறைய பேர்களுக்குத் தெரிந்திருக்கும். பிரேமலதா அக்கா புண்யத்தில் இன்றிலிருந்து அங்கே தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் பொறுப்பை நானும் அவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தமிழில் வலைப்பதிபவராக இருந்தால் மெயில் அனுப்புங்கள். பேங்க் அக்கௌண்ட் நம்பர் அனுப்பி வைக்கிறேன், எவ்வளவு சீக்கிரமாக ட்ரான்ஸ்பர் செய்கிறீர்களோ அத்தனை சீக்கிரம் அங்கே போட்டு விடுகிறேன் :)

Monday, December 05, 2005

Alma மேட்டர்

இதுவும் வழக்கம்போல "அம்ம பாட்டுத்தேன்ங்...".(தேவர் மகன் சிவாஜி பாணியில் வாசிக்கவும்)
Alma Mater என்றால் ஸ்கூல் காலேஜ் யுனிவேர்ஸ்டி என்று எல்லாம் அடங்கும். அதைக் கொஞ்சம் விஸ்தீரணப் படுத்தி சொல்லிக் குடுத்த போதிமரங்கள் எல்லாவற்றையும், கற்றுக்கொண்ட அத்தனைப் பாடங்களையும் ஒரு தலைப்பில் கொண்டுவரும் முயற்சி தான் இந்தத் தொடர் (ஆஹா இதுவல்லவோ ஜல்லியடித்தல் ...அப்போதானே நீங்க தலைப்புக்கும் எழுதறதுக்கும் சம்பந்தம் இல்லையேன்னு சொல்லமுடியாது :) ). அல்மா மேட்டர் நான் முன்னால் எழுதிய தாமிரபரணித் தென்றல், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், மற்றும் ஜொள்ளித் திரிந்ததொரு காலம் ஆகியவற்றைப் போல் ஒரு கிளைக் கதை.

என் மகள் இரண்டு வயதில் காக்கா கதை சொல்லுவாள். அது வேண்டாம் என்று வேறு கதை கேட்டால் சரி என்று தலையை ஆட்டிவிட்டு இது இன்னொரு காக்கா என்று அதே கதையைச் சொல்லுவாள். இதுவும் அதே மாதிரி தான். தலைப்பு தான் வேறயே தவிர இதுவும் அவற்றைப் போல் "என் சோகக் கதையக் கேளு" ரகம் தான்.

மொத்தத்தில் எல்லாவற்றையும் சேர்த்துப் படித்தால் நேரா வந்து என் சட்டைக் காலரைப் பிடித்து விடலாம். சமீபத்தில் ஜொள்ளித் திரிந்த காலம் தொடரைப் படித்து விட்டு சிகாகோ தமிழ் சங்க பிரசிடென்ட் தொடர்பு கொண்டார். நான் எதோ என் கதையைப் படித்து விட்டு ப்ரீயா அமெரிக்காவுக்கு டிக்கெட் எடுத்துக் குடுத்து சிகாகோ தமிழ் சங்கத்தில் பிரசங்கம் பண்ணத் தான் கூப்பிடுகிறாரோ என்று வீட்டில் மன்னார் அண்ட் கம்பேனி தங்கவேலு மாதிரி பந்தா விட்டுக் கொண்டிருந்தேன். மெதுவாக நீங்க எந்த ஊர் நானும் அதே ஊர், நீங்க எந்த ஸ்கூல் நானும் அதே ஸ்கூல், நீங்க எந்தத் தெரு நானும் அதே தெரு, நீங்க எந்த வீடு...அடப்பாவி நீயா...என்று கடைசியில் முடிந்தது. இவருக்கு என் மனைவி வீட்டில் ஒரு முக்கியமான நபரைத் தெரியும் ரொம்ப வாலாட்டினா போட்டுக் குடுத்திருவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். மனுஷனுக்கு எத்தனைக் கவலை பாருங்கள். நேற்று ஒருவர் எனது கடல் புறா பதிவில் ஸ்கூலைப் பற்றியெல்லம் கமெண்ட் விட்டிருக்கிறார். அனேகமாக என்கூட என் க்ளாசில் குப்பைக் கொட்டிய பேர்வழியாக இருக்கலாம்.(அதே பேரில் ஒருவர் இருக்கிறார்) கேட்டிருக்கிறேன்...தெரியவில்லை. இந்தத் தொடரையெல்லாம் எழுதி விட்டு ஊர் பக்கம் போனால் நல்ல செமையாக கிடைக்கப் போகிறது எனக்கு.

அப்புறம் இன்னும் ஒன்று ...புகழந்து பின்னூட்டம் விடுபவர்கள் தயவு கூர்ந்து பெயரை மட்டுமாவது சொல்லுங்களய்யா...வீட்டுலே நானே அனானிமஸாக அடிக்கிறேன் என்று நக்கல் தாங்க முடியலை. (ஹாலேஸ்கானில் ஐ.பியாவது இருக்கும் ப்ளாகரில் அந்த வசதி இல்லை)

உங்களில் நிறைய பேர் நான் முன்பு எழுதிய தாமிரபரணித் தென்றல் மற்றும் நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் ஆகியவற்றைப் படித்திருக்கலாம். படிக்காதவர்கள் படித்து விடுங்கள். அப்புறம் கேள்வி கேட்கும் போது முழித்தீர்களானால் பெஞ்ச் மேல் ஏற்றி விடுவேன். முன்னாடியே படித்தவர்களும் இன்னொரு தரம் படிங்கப்பூ (இல்லாட்டா எங்களுக்கு எப்பிடி ஹிட் கவுண்ட் எகிறுமாம்?)

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - Part1 Part2 Part3 Part4 Part5

தாமிரபரணித் தென்றல் - Part1 Part2 Part3


-தொடரும்

Friday, December 02, 2005

பரீட்சை

பத்தாம் வருட பொதுத் தேர்வு. தேர்வு ஆரம்ப மணியடிக்க இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது. மாணவ மாணவியர்கள் மும்முரமாக கடைசி நேரத்திலும் முட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் பக்திப் பழமாக விபூதியெல்லாம் இட்டுக்கொண்டு இல்லாத சகுனங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராசியான பேனா, பென்சில், ஸ்கேல், எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்க்கப்பட்டன. சில நன்றாக படிக்கும் அதிமேதாவிகள் பாராமல் படபடவென ஒப்பித்து பக்கத்திலிருந்தவர்களின் வயிற்றில் புளி வார்த்துக் கொண்டிருந்தார்கள். அரைகுறையாகப் படித்தவர்களுக்கு இவர்கள் ஒப்புவித்த வேகத்திலேயே எல்லாம் மறந்துவிட்டது போல இருந்தது. சிலர் ஒரு சிட்டிகை உப்பு, பெருங்காயம் போட்டு கரைத்துக் குடித்துவிடுகிற ரேஞ்சில் புஸ்தகத்திற்குள் மண்டையை விட்டுத் தட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் மணியடிக்கும் வரையில் தான்.

எல்லோரும் இடம் பார்த்து உட்கார்ந்து வினாத் தாளும் குடுத்தாகிவிட்டது. தெரிந்த கேள்வி வந்திருக்கா இல்ல புட்டுக்குமா...என்ற அவசரத்தில் வினாத்தாள் சரசரக்கும் சத்தம் அடங்கி எல்லோரும் எழுத ஆரம்பித்தார்கள். புட்டுகிற கேஸ்கள் மட்டும் நகத்தைக் கடித்துக் கொண்டு ஐன்ஸ்டீன் மாதிரி யோசித்தாலாவது எதாவது எழுத முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். அரைகுறைகள் கண்ணை மூடி தியானம் பண்ணி குண்டலினியிலிருந்து விடைகளை இழுத்து வெளிக் கொண்டுவர பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. ஒரு முறை நிதானமாக எல்லோரையும் நோட்டம் விட்டான். கொஸ்டின் பேப்பரை ஒரு முறை பார்த்தான். அவையெல்லாம் படித்த மாதிரியே இல்லை.சொறிகிற வாக்கில் கை போன போது தான் பாக்கெட்டில் அந்த பேப்பர் தட்டுப் பட்டது. "இது எப்பிடி இங்கு வந்தது? "அவனுக்கு திக்கென்று இருந்தது. எப்பிடி இதைப் பற்றி மறந்து போனான்? நேற்று இரவு வைத்த நியாபகம் வந்தது. வேணுமென்றே அதை சட்டைப் பையில் வைக்கவில்லை. நியாபகம் வந்திருந்தால் இதை வெளியிலேயே பையில் பத்திரமாக வைத்துவிட்டு வந்திருப்பான். இப்பொழுது பையில் இருக்கு என்று தெரிந்தவுடன் மனசு கிடந்து அடிக்க ஆரம்பித்தது அவனுக்கு.

சே மாட்டிக் கொண்டால் மானமே போய்விடும்...வெறும் ஸ்கூல் தேர்வு என்றாலாவது ஒன்றும் செய்யமாட்டார்கள்..இது பொதுத் தேர்வு வேறு...பறக்கும் படை வேறு திடீர் திடீரென்று வருவார்கள். மாட்டிக் கொண்டால் விஷயம் ஸ்கூல் முழுவதும் பரவிவிடும்.

அவனுக்கு ஒரு பயமாக இருந்தாலும் "ப்ளையிங் ஸ்காவர்ட் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்...நேற்று தான் வந்திருக்கிறார்கள் இன்று வேறு பள்ளிக்குத் தான் போவர்கள் இங்கேயே திரும்பவும் வரமாட்டார்கள் " தைரியம் ஆறுதல் சொன்னது.

சுற்றுமுற்றும் ஒருதடவைக்கு இரண்டு தடவை பார்த்துக் கொண்டு...ஒருத்தரும் பார்க்காத போது சடக்கென்று பையிலிருந்து எடுத்து வினாத்தாளுக்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டான். லாவாகமாக ஒளித்து வைத்தாலும் பார்த்து எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. லேசாக குனிந்து பேப்பர்களை மறைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தான். இது கொஞ்சம் சௌகரியமாக இருந்தது.

பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது...இவனுக்காகவே காத்திருந்தது போல ப்ளையிங் ஸ்காவர்ட் 'திபு திபுவென' நுழைந்துவிட்டார்கள். மொத்தம் நாலு பேர். இவன் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்ததால் அவர்கள் வந்ததை கவனிக்கத் தவறிவிட்டான். எழுந்த எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு மளமளவென்று காரியத்தில் இறங்கிவிட்டார்கள். "சிட்டிஸன்" படத்தில் அஜீத் முழிப்பது மாதிரி முழித்துக் கொண்டிருந்த இரண்டு பேர்களின் பேப்பர்களை சோதனை போட்டார்கள். இவனுக்கு இதயம் "திக் திக்" என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் அவன் முழி திசைக்கொன்றாக பார்த்து கள்ளப் பார்வை தொற்றிக் கொண்டது. பறக்கும் படையிலிருந்து ஒருவர் நேராக இவனிடம் வந்தார்.

"அந்த கொஸ்டீன் பேப்பர கொஞ்சம் காட்டுங்க...."

போச்சு போச்சு...மாட்டிக் கொண்டான்...அவர் நேராக அப்பிடி கேட்பார் என்று இவன் எதிர்பார்க்கவே இல்லை. இவன் தயங்குவதைப் பார்த்து அவரே பிடுங்கிக்கொண்டார்.

பிரித்த போது இவன் சொருகி வைத்திருந்த பேப்பர் "உள்ளேன் ஐய்யா" என்று கீழே விழுந்தது. எதிர்பார்த்து வந்தது கிடைத்த திருப்தி அவருக்கு. மற்றவர்களையும் கூப்பிட்டு காண்பித்தார்.

"என்ன மிஸ்டர்...இது பத்தாம் க்ளாஸ் பப்ளிக் எக்ஸாம் தெரியுமில்ல? பெண்டாட்டிக்கு லெட்டர் எழுதறதுக்கு வேற நேரம் காலமே கிடைக்கலையா...இங்க சூப்வரவைஸ் பண்றதுக்கு உங்கள போட்டிருக்கா இல்ல இந்த மாதிரி வேலை பார்கிறதுக்கு போட்டிருக்கா?"

"இல்ல சார்...வீட்டுல கொஞ்சம் பிரச்சனை அம்மா வீட்டுக்கு கோச்சுட்டு போயிட்டா அதான்.."

"ப்ரின்ஸிபால் கிட்ட குடுக்கறோம்...அங்க சொல்லுங்க விளகத்த..."

அவனுக்கு அதற்கப்புறம் என்னவோ வியர்ப்பது நின்றுவிட்டது.

Thursday, December 01, 2005

கடல் புறா

சாண்டில்யனின் எழுத்துக்களை ரொம்ப படித்ததில்லை. விடலைப் பருவத்தில் குமுதத்தில் அவர் கதைகளுகளுடன் வரும் சித்திரங்களை யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு நைஸாகப் பார்த்து இருக்கிறேன். சித்திரங்களில் அவர் கதாநாயகிகள் எல்லாம் நல்ல வனப்புடன் இருப்பார்கள். இங்குள்ள நூலகத்தின் புண்யத்தில் அவர் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். சமீபத்தில் கடல் புறா படிக்க நேர்ந்தது. முதல் பாகம் மட்டும் தான் கிடைத்தது. மற்ற பாகங்கள் கிடைக்கவில்லையே என்று ரொம்ப நாளாக எடுக்காமல் இருந்தேன். இந்த முறை எடுத்துப் படித்துவிட்டேன். என்ன ஒரு விறுவிறுப்பு, காதலை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார். காதல் என்பதை விட ரொமேன்ஸ் (இதுக்கு தமிழில் சரியான வார்த்தை என்ன?) என்று தான் சொல்லவேண்டும். அடாடா மனுஷன் கலக்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படித்த பிறகு இப்பிடி விறுவிறுப்பாக இன்னோரு நாவல் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு இது ரொம்பவே பிடித்தது. பொன்னியின் செல்வன் விறுவிறுப்புக்கு சற்றும் குறைந்ததல்ல கடல் புறா. ஆனால் எனக்கு நேர்ந்த கொடுமை என்னவென்றால்...பாகம் 1 மட்டும் தான் கிடைத்தது. மிச்ச பாகங்களை யாரோ புண்ணியவான் எடுத்துக்கொண்டு போய் இன்னும் திரும்பக் குடுக்கவில்லை. கதாநாயகி காஞ்சனையை நினைத்துக் கொண்டு பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் விவிறுப்பாக முடித்திருப்பார். உணமையைச் சொன்னால் இதைப் படித்த அப்புறம் ஒரு காதல் கதை எழுத வேண்டும் என்று இருக்கிறது.(இதெல்லாம் ரொம்ப ஓவரோ?). உடனே இல்லை...எழுத்தை இன்னும் மெருகேற்றிக் கொண்டு.

கடல் புறா கிடைத்தால் படித்துப் பாருங்கள். Highly Recommended !

Tuesday, November 29, 2005

லவ் டுடே

அஷ்வினுக்கு ரொம்பவே எரிச்சலாக இருந்தது. ஒரு வாரமாக அவனுக்கும் திவ்யாவுக்கும் சண்டை. கொஞ்ச நாளாகவே ஒத்துப் போகவில்லை என்றாலும் நேற்று ரொம்பவே ஆகிவிட்டது.

"எல்லாம் அப்பாவைச் சொல்லனும் அவரால் தான் இப்பிடி அவசரப்பட்டு திவ்யாவை கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இல்லாவிட்டால் ப்ரீத்தியிடம் பேசிப் பார்த்திருக்கலாம் " அவனுக்கு நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது. திவ்யாவுக்கு ரொம்ப பிடிவாதம் இருக்கிறது கூடவே திமிர் வேற...என்ன வேணா செய்யட்டும். ஆபிஸ் விஷயமாக என்று சொல்லி ஒருவாரம் வேறு மாகாணத்திற்கு வந்திருக்கிறான். ஹோட்டலில் வந்ததிலிருந்தே இதே நினைப்பாக இருந்தான்.

"நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்...பிடிச்சுதுன்னா நீ யூ.எஸ். திரும்பி போகறதுக்குள்ள கல்யாணம்"

அப்பாவின் பிடிவாதம் அவனுக்குப் புதிதல்ல என்றாலும் கல்யாண விஷயத்தில் இவ்வளவு அவசரப்படுத்தியது ரொம்பவே கோபம் அவனுக்கு.

கேரியர் கூரியர் என்று என்னல்லாமோ காரணம் சொன்னாலும் உண்மையான காரணம்...புதிதாக அப்போது தான் இன்டெர்னெட் சேட்டில் பிரண்டாகியிருக்கும் ப்ரீத்தி. இப்போது தான் நன்றாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், எல்லா விஷயங்களும் அவர்களுக்குள் ஒத்துப் போகின்றன...பார்ததில்லையே தவிர ரொம்ப அழகாக இருப்பாள் என்று சொல்லியிருக்கிறாள். அவனுக்கு அவளை ரொம்ப பிடித்திருந்தது. ப்ரீத்தியிடம் இன்னும் சொல்லவில்லை ஆனாலும் மறைமுகமாக சொல்லிவைத்திருக்கிறான். அவளும் கோபிக்கவில்லை. அடிக்கடி சேட் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.

அவளை நேரில் பார்க்கலாம் என்ற ஆசையில் ஊருக்கு வந்த நேரத்தில் அப்பா இப்பிடி குண்டைப் போடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அப்பாவிடம் இன்டெர்நெட் சாட் என்று சொல்வதற்கெல்லாம் தைரியம் வரவில்லை. சரவண பவனில் டிபன் சாப்பிடுவதற்குப் பதிலா இங்க போய் சாப்பிட்டுவிட்டு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லவிட்டு வந்தால் போச்சு என்று தான் ஒத்துக்கொண்டான். ஆனால் திவ்யாவைப் பெண் பார்த்த போது அவள் அழகில் திணறிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும். நோ சொல்ல முடியவில்லை. தனியாக பேசிய போதும் மணிரத்னம் படத்தில் வருவது போல திக்கித் திக்கித் தான் பேசினான்.

"பிடிச்சிருக்காடா இல்ல அப்பாவுக்காக சொல்லறியா?" தாம் தூம்ன குத்தித்த பையனா இப்பிடி உடனே ஒத்துக்கொண்டான் - அம்மாவால் நம்பவே முடியவில்லை.

கல்யாணம் ஆகி யூஸ் கூட்டி வந்து ஹாலிவுட்டை சுத்திக் காட்டி, நயாக்ரா போய் போட்டோ எடுத்துக் கொண்டு, வெங்கடாசலபதி கோவிலில் வேஷ்டி கட்டிக் கொண்டு அர்சனை வைத்து, வால் மார்ட்டில் எப்பிடி புளி பருப்பு வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து, டெலிபோன் கார்டு தந்திரங்கள் கற்றுக்கொடுத்து மோகம் முப்பது நாளுக்குப் பதிலாக அவர்களுக்குள் நாற்பத்தைந்து நாள் நீடித்தது.

திவ்யாவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. பார்த்து பார்த்து சொல்லிக்குடுத்த அஷ்வினா இப்பிடி திடீரென்று மாறிவிட்டான். மாறிவிட்டானா இல்லை குணமே இது தான? எவ்வளவு நானும் பார்த்துப் பார்த்து செய்திருப்பேன்? முடியாமல் தோசையும் தக்காளிச் சட்னியும் செய்து குடுத்துவிட்டு ஆபிஸில் லிஸி முதற்கொண்டு எத்தனை பேருக்கு பிடித்தது? ராஜனுடைய அம்மா கூட கேள்விப்பட்டு கோவிலில் வைத்து "யூ.எஸில் தோசையெல்லாம் செய்கிறாளே உன் பெண்டாட்டி" என்று பாரட்டவில்லையா...ஆபிஸ் வேலையென்று சும்மா சொல்லிவிட்டு போகிறான். என்னை பிரிந்திருக்கவேண்டும் என்பது தான் அவன் நோக்கம். தெரியாதென்று நினைத்துக் கொண்டிருக்கிறான் போகட்டும் ஒரு வாரம் தொலையட்டும். பார்க்காமல் இருந்தால் தான் பெண்டாட்டி அருமை தெரியும்.

அவளுக்கு தாந்தான் எல்லாம் என்ற நினைப்பு. ஏர்போர்டில் இறங்கியதிலிருந்து பெக்க பெக்கவென முழித்துக் கொண்டிருந்தவளுக்கு எவ்வளவு சொல்லி குடுத்திருப்போம்? கார் ஓட்ட சொல்லிக்கொடுக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன்? ஊரில் இல்லாத தோசையும் தக்காளிச் சட்னியும்...அம்மா இதை விட எவ்வளவு அருமையாகச் செய்வாள். ப்ரீத்தி கூட நல்ல சமைபாள் என்று சொல்லி இருக்கிறாளே அஷ்வினால் ப்ரீத்தியின் நினைவுகளை உதறமுடியவில்லை. எவ்வளவு நல்ல தோழியாக அனுசரனையாக இருந்தாள்.
"ஹாய் ப்ரீத்தி, நாந்தான், என்னடா இவ்வளவு நாள் ஆளக் காணோம் திடீரென்று மெயில் பண்ணறானேன்னு நினைகாத..நடுவில் என் வாழ்வில் நிறைய நிகழ்வுகள். எனக்கு திடிரென்று கல்யாணம் ஆகிவிட்டது. உடனே கங்கராட்ஸ் சொல்லாதே...கல்யாண வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி அவ்வளவு நல்ல போகல. கொஞ்சம் வருத்தமா இருக்கு உன்ன மிஸ் பண்ணிட்டேனோன்னு...என்ன செய்ய என் மனைவிக்கும் எனக்கும்..." ப்ரீத்திக்கு மெயில் அனுப்பிய பிறகு தான் அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

"....இருந்தாலும் கவலப்படாதே...எல்லாருக்கும் நினைச்ச மாதிரியா வாழ்க்கை அமையுது...நான் மேலே சொன்ன வழிமுறைகளை முயற்சி செஞ்சு பார்..நான் போன மெயிலில் சொன்ன மாதிரி என் வாழ்கைய பார்க்கும் போது உன் வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை என்று தான் தோன்றுகிறது. உன் வாழ்க்கை நல்ல படியா அமைய என் வாழ்த்துக்கள்" - கண்ணீரைத் துடைத்த படி பதிலை எழுதி முடித்தாள் ப்ரீத்தியாகிய திவ்யா தருணாகிய அஷ்வினுக்கு.

Friday, November 25, 2005

மலரினும் மெல்லிய...

வா..டா என் கழுத்தை வளைத்து - அதில்
முகத்தை நுழைத்து ஒரு தேடல் செய்

அன்று அந்தப் பாடல் கேட்டதிலிருந்தே அடிக்கடி முனுமுனுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் மனதிற்குள் ஆசைதான். "உனக்கென்னடி கிளி மாதிரி இருக்க கொத்திக்கிட்டுப் போயிடுவான்" அத்தை சொல்லும் போதெல்லாம் "போ அத்தை உனக்குப் எப்பவும் இதே பேச்சு தான்" சும்மா ஒப்புக்குத் தான் சொல்லுவாள். உள்ளே மனதில் கனவுலகம் விரியும் அவளை அறியாமலே உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய முறுவல் பூக்கும். "அடிக்கள்ளி எல்லாம் எனக்குத் தெரியும்டி நானும் உன்வயசக் கடந்து வந்தவ தான் " அத்தை விடமாட்டாள் வம்பு வளர்ப்பாள். இவளுக்கு இன்ப அவஸ்தையாக இருக்கும்.

அத்தையைவிட நிர்மலா அக்கா கொஞ்சம் பரவாயில்லை, கிண்டல் அடிப்பதோடு அவளும் ஜாலியாக சேர்ந்து கொள்வாள். "கஜினி சூர்யா மட்டும் சரி சொல்லட்டும்...இந்த ஆள இப்பிடியே விட்டுட்டு அவனோடு ஓடிப்போயிறுவேன். சிக்க மாட்டேங்கறானே..கடங்காரிங்க அம்புட்டு பேரும் அப்பிடியேல்ல போய் அப்புறாளுங்க "

சூர்யா லெவலுக்கெல்லாம் வேண்டாம் இவளைப் புரிந்து கொண்டு அன்பு அனுசரனையாக இருப்பவன் போதும் இவளுக்கு. நிறைய யோசித்து வைத்திருந்தாள். சனிக்கிழமையானால் நல்லெண்ணைய்யில் மிளகு போட்டு அவனுக்கு தேய்த்து குளிக்கச் சொல்லவேண்டும், குளித்து வந்தவுடன் காரமாக பூண்டு வத்தக்குழ்ம்பு வைத்துக்குடுக்க வேண்டும். சாய்ங்காலம் காலாற நடந்து, ராத்திரி அவன் தோளில் சாய்ந்து கொண்டு பாட்டு கேட்கவேண்டும்.

"ஆச்சாம்மா?" உள்ளேயிருந்து அத்தையின் குரல் தான்.

"இதோ இன்னும் பத்து நிமிஷம் ஆயிரும்"

"சீக்கிரம்மா கவிதா நேத்திக்கே வந்தா...நான் தான் இன்னிக்கு வரச் சொல்லியிருக்கேன்...புள்ளைய ஸ்கூலுல விட்டுட்டு வரேன்னு சொல்லியிருக்கா...அதுக்குள்ள முடிச்சுறும்மா"

அவளுக்கும் தெரியும் விரல்கள் வேகமாகப் பின்ன ஆரம்பித்தன. அழகாக சின்னக் கூடைகள் பின்னுவாள். வீட்டில் சும்மா இருக்கும் போது அது தான் அவளுக்கு பொழுது போக்கு. இதைக் கற்றுக் கொடுத்ததே கணேஷ் தான். நல்ல பையன். இவளுக்கு ரொம்ப பிடிக்கும். கற்றுக் கொடுக்கும் போது சில சமயம் கைகள் உரசிக் கொள்ளும். இவளுக்கு சிலிர்ப்பாக இருக்கும். ஆழ்மனதில் பத்திரமாக பூட்டி வைத்திருந்தாள் அந்த நினைவுகளை.

"ஏங்க..."

கணேஷ் தான். அதெப்பிடி கரெட்டாக சொல்லிவைத்த மாதிரி வந்தான்?

"பக்கத்து தெரு வரைக்கும் போயிட்டு வந்துறேன். அக்கா வந்தா சாவிய குடுத்திருங்க"

ஆயுசு நூறுடா உனக்கு. உன்னைக் கட்டிக் கொண்டால் நான் தீர்க சுமங்கலி தான்.

"ஏங்க சிரிக்கிறீங்க...?"

"...ம்..இல்லையே..சரி குடுத்திடறேன்"

நல்ல வேளை மேலும் நோண்டிக் கேட்கவில்லை..போய்விட்டான். முகம் காட்டிக்குடுத்திருக்கும். சிரிப்பை அடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே கல்யாணமாகியிருந்தால் இதுக்கெல்லாம்...

"என்னம்மா இன்னிக்கு என்னாச்சு இன்னும் முடியலையா? உடம்புக்கு எதாவது பண்ணுதா? நான் வேற குளிக்க வெந்நீர் போட்டிருக்கேன்..."

"இல்ல அத்தை ஆயாச்சு..உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்ல..இந்தக் கத்திரிக்கோல எங்க வைச்சேன்னு தெரியல அதான் தேடிக்கிட்டு இருக்கேன்.." மெல்லக் கையை வைத்து துளாவ ஆரம்பித்தாள்.

"அது இங்க இருக்கும்மா...என் கால் பட்டிருக்கும் அதான் தள்ளி வந்து கிடக்கு...நீ குளிக்க போ...நான் முடிச்சுக்கிறேன்..."

அவள் மெல்ல சுவற்றைப் பிடித்துக்கொண்டு எழுந்து தன் குச்சியால் மெல்ல தட்டிக் கொண்டே குளியலறைக்குப் போகலானாள்...

வா..டா என் கழுத்தை...வளைத்து...அதில்

Thursday, November 24, 2005

லண்டனிலிருந்து கனடா வரை ஜொள்ளு....

உங்கள் வாய் முஹூர்த்தம் பலித்துவிட்டது. ஜொள்ளித் திரிந்த காலம் பேப்பரில் வந்து கொண்டிருக்கிறது. ஆமாம் கடந்த ஒரு மாத காலமாக வந்து கொண்டிருக்கிறது. எனக்கே நேற்று தான் தெரியும். நண்பர் பாஸ்கர் பாலனுக்கு சொல்லி என் கவனத்துக்கு வந்தது. பிரேமலதா "ஏங்க எங்கிட்ட சொல்லவே இல்லையே" என்று அங்காலாய்த பொழுது எனக்கும் அதே வருத்தம் தான் இருந்தது பேப்பர்காரர்கள் நம்மிடம் சொல்லவேஇல்லையே என்று. லண்டன் மற்றும் கனடாவில் வெளியாகும் "ஒரு பேப்பர்" (பேப்பர் பெயரே அதாங்க) என்ற லோக்கல் நியூஸ் பேப்பர் தான் சத்தம் போடாமல் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். தனியாக ஒரு செக்க்ஷன் குடுத்து தொடராக வந்து கொண்டிருக்கிறது.

எடிட்டரிடம் தொலைபேசியில் பேசினேன்...முதலில் இ.மெயில் அட்ரெஸ் கிடக்கவில்லை என்று ஜல்லியடித்தார். பின்னூட்டத்திலாவது தகவல் தெரிவித்திருக்கலாமே என்று மடக்கிய பிறகு சரியாக நாலரை முறை வருத்தம் தெரிவித்தார்.

"அடிக்கடி அனானிமஸ் பெயரில் சீக்கிரம் ஜொள்ளித் திரிந்த காலம் எழுதுங்கன்னு அவசரப்படுத்தியது நீங்கதானா " என்று கேட்டதற்கு சிரித்து சமாளித்துவிட்டார். இந்திய ஹைகமிஷன் பற்றியது மற்றும் பல பதிவுகளை வெளியிட்டிருப்பதாக நிறைய தகவல் சொன்னார். அட்ரெஸ்ஸை வாங்கிக் கொண்டு இதுவரை சுட்டு இட்ட பதிவுகளை தபாலில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். (அனுப்பிருவீங்க தானே சார்?)

என்னம்மோ போங்க ஜொள்ளு விட்டது கனடா வரைக்கும் போய்க்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் பேப்பர் சென்னை தோசாவிலும் இருக்கிறதாம். இத்தனை நாள் பார்க்கவே இல்லை.

பலசரக்கு கடையில் வேலை பார்ப்பவர் நன்றாகப் பேசுவார். அவரிடம் லேசாக சொன்னேன் (சொன்னாலாவது கூடக் கொஞ்சம் கறிவேப்பிலை தருவார் என்ற நம்பிக்கையில் தான்).

"யாரு நீங்களா?? பத்திரிக்கையிலயா"

"அட ஆமாங்க"

"என்னத்தப் பத்தி எழுதறீய?"

"...அது வந்து... ஜொள்ளுவிடறதப் பத்தி.."

"ஹா ஹா எது இந்தப் பொட்டப் புள்ளகளைப் பார்த்து இளிக்கறதையா...? சும்மா உடாதீங்க......உங்க பெயர் போட்டிருக்குமா..?"

"...போட்டிருக்கும்...ஆனா டுபுக்குன்னு போட்டுருப்பாங்க..."

"டுபுக்கா?..இதென்ன பெயரு? ..ம்ம்ம்ம் என்ன பேப்பர்ல வருது?"

"...அது வந்து "ஒரு பேப்பர்"..."

"...உங்கள மாதிரி இன்டெர்நெட் பார்க்கறதுக்கு எங்களுக்கு சம்பளம் குடுக்கறான்னு நினைச்சீங்களா...சும்மா வேலை நேரத்துல விளையாடாதீங்க..."

சொக்கா....சொக்கா....

"ஒரு பேப்பர்" லிங்க் இங்கே ஆரம்பித்து...இங்கே இங்கே இங்கே

Tuesday, November 22, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...12

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9    Part 10    Part 11

காவியம் படைத்து விடவில்லை, ஆனாலும் என்னம்மோ பெரிய எழுத்தாளர் மாதிரி உங்களுக்கு நன்றி நவில்தலுடன் முடிவுரை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. (உங்களுக்கு நன்றி சொல்லாட்டா அடுத்த ஜென்மத்துல ஒரு பெண்ணும் என்ன திரும்பி கூட பார்க்கமாட்டான்னு என்னமோ உள் மனசு சொல்லுது) ஜொள்ளித் திரிந்த காலம் எழுதுவதற்கு முன் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பெயர், இதுல இதவேற எழுதலாமா என்று ஒரு குழப்பம். சொன்னால் நம்புவீர்களா தெரியவில்லை(நான் எதைச் சொல்லி நம்பியிருக்கிறீர்கள்?). இதை எழுத வேண்டும் என்று நினைத்து குமைந்து கொண்டிருந்தது நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால். முன்னுரை எழுதி தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் எதோ ஜாலியான பாட்டைக் கேட்டுக் கொண்டே ட்ரெயினில் தூசி தட்டி முதல் பதிவையும் போட்டுவிட்டேன். நீங்கள் குடுத்த உற்சாகத்தைப் பார்த்த போது கொஞ்சம் மலைப்பாக இருந்தது ரொம்ப பில்டப் குடுத்துவிட்டேனோ என்று. ஏதோ சமாளித்து விட்டேன் என்று நினைக்கிறேன். சில பதிவுகள் நாளாச்சே போடவேண்டுமே என்று அவசரமாக எழுதியிருக்கிறேன் தரம் (??!!) குறைந்து இருக்கலாம். ஒரு பதிவில் நீங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய போது கண் திறப்பாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் கவனமாக இருந்தேன். மிக்க நன்றி. (இதில் எழுதி என்னம்மோ திருப்தி இல்லாமல் ஒரு பதிவை வேறு ஓரம் கட்டிவிட்டேன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது)

வூட்டுல நாள் ஜொள்ளுவிட்டத அடிக்கடி கேட்டாலும் லேசாகத் தான் சொல்லுவேன். ஒரு விஷயத்தை எப்பவோ சொல்லி இன்னமும் கிண்டல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிலேர்ந்து உஷாராயிட்டேன். ஆனாலும் பதிவைப் படித்துவிட்டு குடை குடைன்னு குடையாம எதோ பொழச்சு போறான்னு விட்டுட்டாங்க( அப்பிடி தானே?.. இல்ல முடியட்டும்ன்னு மொத்தமா கேட்டுக்கலாம்னு காத்திருக்கீங்களா?) உங்களுக்கும் நன்றி. நன்றி எல்லாம் சொல்லியிருக்கேன் தங்கமாளிகை பில்ல பார்த்து போடுங்கம்மா எதோ புள்ளகுட்டிக்காரன்.

ரொம்ப ஜொள்ளுப் பார்டி இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கனும்ன்னு உங்களில் நிறைய பேர் நினைத்து விடுவீர்களோ என்று வேறு உதறலாய் இருந்தது. ஆனால் நிறைய பேர் பெண்கள் பின்னூட்டத்திலும் மெயிலிலும் ஆதரவு அளித்த பின்பு தான் கொஞம் நிம்மதியாக இருந்தது. தீபாவளிப் பார்டியிலும் சகஜமாகப் பேசினீர்கள்.உங்களுக்கும் என் நன்றி.

என்னடா ஆம்பளைகளுக்கு நன்றி சொல்லலையேன்னு நினக்காதீங்க (புத்தியக் காட்டிட்டான்யா). பின்னூட்டத்தில் உற்சாகம் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.உங்களில் சிலபேர் யூ.எஸ்லிருந்து போன் பண்ணி வேறு உற்சாகம் அளித்தீர்கள். கோடானு கோடி நன்றியையா..

என்னடா பெயரைச் சொல்லாமல் தேர்தலில் ஜெயிச்சமாதிரி மொத்தமா அறிக்கை விடறானேன்னு நினைக்காதீங்க...நான் கெமிஸ்ட்ரியில கொஞ்சம் வீக் யார் பெயரையாவது விட்டுவிடுவேன் அதான்.

மொத்ததில் நிறைய நண்பர்களும் உற்சாகமும் கிடைத்திருக்கிறது. You all gave me excellent support. இந்த முயற்சியில் உங்களின் உதவியால் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தெம்பாக இன்னும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் கூடிய சீக்கிரம் அடுத்த தொடரை ஆரம்பித்துவிடுவேன். (போச்சுடா..ஒரு பேச்சுக்கு சொன்னா.கிளம்பிட்டான்யா)

உங்கள் எல்லோருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி!!

-இத்துடன் (அஃபீஷியலான) ஜொள்ளு முற்றும்.

Monday, November 21, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...11

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9    Part 10

ஜொள்ளு விடுகிற குரங்குகள் பலவிதமான ஸ்ட்ரேடிஜி வைத்திருப்பார்கள். எனக்கு மிருதங்க ரவை எப்பிடி உபயோகமாக இருந்ததோ அது மாதிரி. நானெல்லாம் ஜுஜுபி. சில புத்திசாலி குரங்குகள் தாவறதும் குதிக்கிறதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இப்பிடி தான் ஹாஸ்டல் என்றாலே திருட்டு பீர், தம், சரோஜாதேவி புத்தகங்கள் (தெரியாதவர்கள் விட்டுவிடவும் இதற்கு ஏன் இந்த கோட்வேர்ட் எனக்கும் தெரியாது) என்று மலிந்து கிடக்கும் இடத்தில் ஒரு குரங்கு மட்டும் சமத்தாக வாழ்க்கை ஜோஸியம், கைரேகை சாஸ்திரம் என்று குடைந்து கொண்டிருந்தது. அடுத்த யூத் பெஸ்டிவலில் அந்தக் குரங்கு ஜிகிடிகள் கையைப் பிடித்து ஜோஸியம் சொல்ல ஆரம்பித்துவிட்டது. அப்புறம் எல்லாக் குல்லாக் குரங்குகளும் கொஞ்ச நாளைக்கு கரேகை ஜோதிட பூஷணமாக அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் என்னதான் குதித்தாலும் தாவினாலும் "Survival for the fittest" தத்துவம் தான். அதுக்கப்புறம் என்ன தான் எண்ணைய தடவிக் கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்.

இப்பிடியாக நான் யூத் பெஸ்டிவல்களில் வாழ்க்கை கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் காலேஜ் டீமில் ஒரு பெரிய யூத் பெஸ்டிவலுக்கு பெரிய டீமாக அனுப்ப முடிவு செய்தார்கள். அதற்காக ஆட்களை தேர்வு செய்ய ஒரு மீட்டிங் ஏற்பாடாகி இருந்தது. இந்த மீட்டிங்க்கு நம்மள விட்டா யாரு வரப்போறா என்ற தெனாவெட்டில் போன எங்க கோஷ்டிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. உலக மகா அதிசயமாக அந்த கூட்டத்திற்கு கொஞ்சம் பெண்கள் வந்திருந்தார்கள். பி.ஜியிலிருந்து இரண்டு மூன்று சீனியர்களும் யு.ஜியிலிருந்து இரண்டு பேரும் வந்திருந்தார்கள். டீமெல்லாம் செலெக்டாகி பார்த்தால் டம்ப் சேரட்ஸ் டீமில் என்னுடன் ஒரு பி.ஜி. சீனியர். அன்றிலிருந்து அவர்கள் அக்காவாகி விட்டார்கள். டீம் ப்ராக்டீஸுக்கு அவர்களுடன் இன்னொரு அக்காவும் வருவார்கள். நாங்கள் அப்புறம் எல்லோரும் பாசமலர்களாகி விட்டதால் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வர ஆரம்பித்தோம். இப்பிடியாக நான் அந்த ப்ரெண்டு அக்கா வீடிற்கு போய் வந்த காலத்தில் தான் எனக்கு வாழ்கையில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. கடவுள் இவன் பிரம்மச்சாரியாக இருந்து ஜொள்ளு விட்டதெல்லாம் போதும் என்று முடிவு கட்டிய நேரமது.

அந்த அக்காவின் வீட்டில் ஓரளவுக்கு பழக்கமான போது தான் அந்தப் பெண் அறிமுகமானாள். அக்காவின் சித்தப்பா பெண். ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடு. உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் பழக்கமில்லையாதலால் அந்தப் பெண்ணைப் பார்த்த போது எந்த விதமான எண்ணமும் உண்டாகவில்லை. அவர்கள் உறவினர் பையன் ஒருவன் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்தான். என் மிருதங்கம் வார் கொஞ்சம் இழுத்துக் கட்ட வேண்டியிருந்ததால் அவனிடமிருந்து போட்டிகளுக்கு மிருதங்கம் கடன் வாங்கிக் கொள்வேன். இது போக அவர்கள் வீட்டில் வாசிக்க சொல்லி அங்கே வேறு அடிக்கடி கச்சேரி நடக்கும். கூட்டுக் குடும்பமாகையால் எல்லோரும் கூட்டமாக உட்கார்ந்து கேட்பார்கள். வாசித்து முடித்தால் தேங்காய் மூடிக்குப் பதிலாக "சபாஷ்" என்று சொல்லி தோசையும் புளிக்காத தயிரும் டிபன் கிடைக்கும். வெட்கப்பட்டுக் கொண்டே நாலு தோசையை சத்தம் போடாமல் சாப்பிட்டுவிட்டு வருவேன்.

நாளாக நாளாக எதோ மாற்றத்தை உணர முடிந்தது. இந்தப் பெண்ணின் அப்பா அம்மாவிற்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. மிருதங்கம் வாசிக்காமலே சில நாள் தோசை டிபன் எல்லாம் கிடைக்கும். இந்தப் பெண்ணும் கொஞ்சம் துறுதுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கும். ஒரு நாள் வழக்கம் போல் அவர்கள் வீட்டில் (ஓசி) மிருதங்கக் கச்சேரி. ஊரிலிருந்து அத்தை வந்திருந்தார்கள் இதுபோக சமையல் எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் கூட்டம் வேறு. சும்மாவே நல்ல வாசிப்போம் இப்பிடி கோபியர் ரமணனாக பொம்மனாட்டிகள் படை சூழ வாசிக்க சொன்னா கேட்கவா வேண்டும். சிவாஜி சொல்கிற மாதிரி நாபிக் கமலத்திலேர்ந்து புறப்பட்டு சும்மா பிச்சு உதறிட்டேன். தனியாவர்தனம் வாசித்து முடிச்சாச்சு யாருக்கும் எழுந்து போக மனசில்லை. மிருதங்கம் வாசிச்ச புள்ளையாண்டனுக்கு பசிக்குமே சட்னியோடு தோசை வார்த்துப் போடலாமே என்று தோணாமல் "பாட்டோடு மிருதங்கம் வாசிச்சா நன்னா இருக்கும், அவளே பாடு இவளே பாடு" என்று ஏலம் நடந்து கொண்டிருந்தது. போடுகிற நாலு தோசைக்கு இதெல்லாம் கொஞ்சம் ஒவர் என்று இன்னிக்குத் தோன்றுகிறது, அன்னிக்குத் தோணலை, வயசு அப்பிடி. கடைசியில் இந்தப் பெண் நல்லாப் பாடுவாள் என்று இவளிடம் வந்து நின்றது. இந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் வெட்கம். பிகு பண்ணிக்கொண்டிருந்தாள். ஒரு பாட்டி சும்மா இருக்காமல் "ஏண்டியம்மா எதுக்குடி வெட்கம் அண்ணா மாதிரி தானே சும்மா பாடு " என்று கொளுத்தி போட்டுவிட்டார்.

இந்தப் பெண்ணுக்கு வந்ததே கோபம். "அண்ணான்னு சொன்னாலாம் பாட மாட்டேன்" என்று படக்கென்று எழுந்து போய்விட்டாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. உள்ளூர தேன் குடித்த மாதிரி இருந்தாலும் சபையில் விளக்கெண்ணய் குடித்த மாதிரி நெளிந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அன்றைக்கு எல்லோரும் சீரியலில் வருவது மாதிரி சிரித்து சமாளித்துவிட்டார்கள். அப்புறம் அந்த அக்காவும் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு ரொம்ப நல்ல பையன் மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகி எல்லோருக்கும் ரொம்பவே என்னைப் பிடித்து விட்டது அவர்கள் தெரு நாயைத் தவிர. மொசப் பிடிக்கிற மூஞ்சியை நாய்க்குப் பார்த்தால் தெரியாதோ என்னைப் பார்த்தாலே குரைக்கும். அப்புறம் ஊரில இல்லாத பாலிடிக்கெஸெல்லாம் பண்ணி பையன் சொக்கத் தஙகம், பெண் தங்கத்தில் பதித்த வைரமாக இருப்பாள் ஜோடி நன்றாக இருக்கும் என்று அவர்கள் வீட்டில் எல்லோரையும் நகைக்கடை சேட்டுகள் மாதிரி பேச வைத்துவிட்டேன். பெண்ணை விட அவ அப்பா அம்மாக்கு என் மேலெ லவ்வுஸ் ஜாஸ்தியாயிடுத்து.

ஆனால் எங்கள் வீட்டில் எனது அக்காக்கு என் லட்சணம் தெரியுமாகையால் முதலிலேயே கண்டுபிடித்துவிட்டாள். ஆனால் நான் சரணடர் ஆகி அவளுக்கும் இவளைப் பிடித்துவிட்டதாகையால் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக இவளை எங்கள் வீட்டிற்கு அப்பப்போ சும்மா வருகிற மாதிரி வரச் சொல்லி இவளும் வந்தாள். இவளைப் பார்த்தவுடனேயே எங்கள் வீட்டில் பிடித்துவிடும் என்று போட்ட கணக்கு தப்பவில்லை. கூடவே நானும் யாருக்கு என்ன பிடிக்குமென்று கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருந்தேனாகையால் விரைவிலேயே எங்கள் வீட்டிலும் எல்லோரும் "நகைக் கடை சேட்டுக்கள்"ளாகினர். அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் வீட்டில் என்னிடம் "உனக்கு ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறோம். உனக்கு பிடித்திருக்கிறதா என்று சொல்" என்று இந்தப் பெண்ணைக் கை காட்ட, நானும் "பெரியவர்கள் நீங்கள் பார்த்து எது செய்தாலும் சரி, எனக்குன்னு எந்த தனி அப்பிப்ராயமும் இல்லை நீங்க என்ன சொலறேளோ அதக் கேக்கறேன்" என்று சொல்ல அவர்களும் "புள்ளயாண்டன்னா இப்பிடினா இருக்கனும்"ன்னு சிலாகிக்க, அப்புறமென்ன டும் டும் டும் கொட்டி ஓடியே விட்டது ஆறு வருடங்கள்.

"ஹூம்...மிருதங்கம் வாசிச்சதுக்கு ஒத்த தேங்காய் மூடி குடுத்து அனுப்பாம தோசையும் போட்டு பொண்ண குடுத்தா பாருங்கோ...எல்லாம் விதி"

"ஹூம்...ஒத்த தேங்காய் மூடியே குடிதிருக்கலாம் சட்னி வைச்சு அடுத்தநாளோடு முடிஞ்சு போயிருக்கும்..."

"ஏன் சொல்லமாட்டேள்...நகை,பட்டுப்புடவை எல்லாம் சூப்பரா செலெக்ட் செய்யறேன்னு எல்லோரும் சொல்றா ஆனா வாழ்கையில முக்கியமான செலெக்க்ஷன்ல கோட்டைவிட்டுடேனே.."

"இதத் தான் Blessing in disguise-ம்பான் என்ன பண்றது ஐஸ்வர்யா ராயோட ஜாதகம் பொருந்தல அவளோட நஷ்டம் உனக்கு பேரதிர்ஷ்டமா அமைஞ்சிருக்கு..."

எல்லாப் புருஷன் பெண்டாட்டிகள் மாதிரியும் நாங்களும் ஊடல்களுக்கு நடுவே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.


- அடுத்த பதிவோடு ஜொள்ளுவது நிறைவடையும்.

Tuesday, November 15, 2005

முல்தானி மெட்டி

போன தடவை இந்தியா போன போது கேள்விப் பட்டேன் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு விளம்பரத்தில் வழக்கம் போல் ஒரு அழகான குட்டி பூப்போல சிரித்துக் கொண்டிருக்க பின்ணனியில் ஒரு கரகர மாமா அந்த சோப்பில் முலதானி மெட்டி இருப்பதால் தான் இந்தக் குட்டி இவ்வளவு சிகப்பாக இருப்பதாக அளந்து விட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக விளம்பரத்தில் சொல்வதை எல்லாம் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். பாதாம், முந்திரி போட்டு அல்வா செய்தால் பேஷாக இருக்கும் இதையெல்லாம் சோப்பில் போட்டால்? சோப்பையா திங்க முடியும்?

அப்புறம் அடிக்கடி முல்தானி மெட்டி பெயர் டீ.வியில் அடிபட அப்பிடி என்னதான் இது என்று கொஞ்சம் ஆர்வம். வூட்டுல வேற இதுக்கு ஏகப்பட்ட ரெக்கமண்டேஷன்.

"முல்தானி மெட்டி ரொம்ப எஃபெக்டிவ்வா இருக்காம்...என் ப்ரெண்டு சொன்னா...மேனிக்குப் பொலிவு கூடுதாம்..."

தோழிகள் சொன்னாலே கொஞ்சம் விவகாரமாகத் தான் இருக்கும். தோழி சொன்னா கோழி சொன்னா...என்று டீ டிகாஷன், காய்ந்த ஆரஞ்சு தோல், முட்டை கரு என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் எல்லாவற்றையும் கலக்கு கலக்கி தலைக்கு கொஞ்ச நாள் தேய்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கலவை பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கும் கப்பு தாங்காது. அதை தேய்த்துக் குளித்துவிட்டு நாத்ததைப் போக்குவதற்கே ஒரு பாட்டில் ஷாம்பு காலியாகிவிடும். நமக்கு ஷாம்பு காலியாகற ரேட்டைப் பார்த்தே கவலையில் கூட கொஞ்சம் முடி வளர்ந்தது.

ஆனால் முல்தானி மெட்டி வடகிந்திய சினிமா நடிகை மாதிரி பெயரே அம்சமாக இருந்ததால் கொஞ்சம் அசந்துவிட்டேன். இதுமாதிரி எது வாங்குவதாக இருந்தாலும் என் மனைவியிடம் ஒரு ப்ரமாஸ்திரம் ஒன்று இருக்கும். "நீங்க கூட யூஸ் பண்ணி பார்க்கலாம்...உங்க முகமும் பளபளப்பாகிவிடும்". அடுத்த தரம் ஊருக்குப் போகும் போது வாங்குவோம்ன்னு சொல்லி வைத்திருந்தேன்.

இந்த முறை இங்குள்ள சூப்பர் மார்க்கெட் டெஸ்கோவிற்கு போன் போது அதை கண்கொத்திப் பாம்பாக கண்டுபிடித்துவிட்டாள். அவ்வளவு பெரிய கடையில் இத மாதிரி சமாச்சாரங்களை பெண்களால் மட்டும் தான் கண்டு பிடிக்கமுடியும்.இந்தியாவிலிருந்து வந்திருந்தது. ஒன்னும் சாக்கு சொல்ல முடியவில்லை. திரும்பவும் "நீங்களும் வேணா.." பாட்டு பாடி ஒன்றுக்கு மூன்று பாக்கெட்டுக்கள் வாங்கியாச்சு.

உன்னால் முடியும் தம்பிக்கு இதெல்லாம் தேவையில்லை என்றாலும்...தீபாவளி பார்டி வருகிறதே..போட்டோ வேறு ப்ளாக்கில் போடுவோமே...கஜினி வேற வெளிவந்துவிட்டதே..மனுஷனுக்கு ஆயிரம் கவலை இருக்காதோ.

"அந்த முல்தானி மெட்டியைக் கொண்டுவா போட்டு பார்ப்போம்..." பந்தாவா சொன்னாலும்...மைசூர்ல இருக்கறவர்களெல்லாம் மைசூர் போண்டோ பண்ண முடியுமா? அம்மா தாயே பாட்டு பாடி மனைவியே போட்டு விட்டார். அசையாமல் அப்பிடியே அரைமணி நேரம் உட்கார வைத்துவிட்டார். முகம் கழுவி கண்ணாடியில் பார்த்த போது அழகுக்கு அழகு சேர்த்த மாதிரி தான் இருந்தது. ஏற்கனவே பொலிவான முகத்தில் கூடக் கொஞ்சம் பொலிவு கூடின மாதிரி தான் இருந்தது.

"சூப்பர் நல்லாத் தான் இருக்கு " என்று பாக்கெட்டில் இருந்த ஒரு துண்டு சீட்டை படித்த போது தூக்கிவாரிப் போட்டது. முல்தானி மெட்டி என்பது ராஜஸ்தானிலிருந்தோ வேற எங்கிருந்தோ வந்த சலிக்கப்பட்ட களிமண் என்று தெளிவாக போட்டிருந்தது.

அடப் பாவிங்களா...ஏற்கனவே மண்டயில தான் களிமண்ன்னு பார்த்தா..இப்பிடி மூஞ்சியிலயும் களிமண்ணப் பூசிட்டீங்களேடா...அப்போ பொலிவு கூடினதா தோணினதெல்லாம் பிரம்மையா...அதானே...ஏற்கனவே களையான முகம் என்பதால் ஏமாந்துவிட்டேன் என்று தோன்றியது.

அதோடு என்னுடைய முலதானி மெட்டி சகவாசம் முடிந்தது. வூட்டுல மட்டும் இன்னமும் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இப்போவெல்லாம் எதையும் குப்பையில் போடுவதற்கு முன்னால் இது உபயோகப் படுமா என்று மனைவியிடம் கேட்டுவிட்டுத் தான் குப்பையில் போடுகிறேன்.

Friday, November 11, 2005

லண்டன் இந்திய ஹைகமிஷன் ஒரு வெட்கக் கேடு!

இன்று பாஸ்போர்ட் விஷயமாக இந்திய ஹைகமிஷனுக்குப் போக வேண்டி இருந்தது. இதற்கு முன்னமே இரண்டு தடவை போயிருக்கிறேன். சந்தையில் நுழைந்தது மாதிரி தான் இருந்தது. நிலமை இன்னும் மோசமாகியிருக்கிறது. தீபாவளிக்கு சென்னை ரங்கநாதன் தெருவிற்கு போன மாதிரி இருந்தது. முதலில் வெளியில் டோக்கன் வாங்க வேண்டும். ஒரு நாளைக்கு நூறு டோக்கன் தான் த்ருவார்கள். அங்கே பொறுமையாக க்யூவில் நின்று கொண்டிருக்கும் போதே..ஏஜன்ட் என்று சொல்லிக்கொண்டு நாலு சிங் மாமாக்கள் க்யூவையெல்லாம் மதிக்கவே இல்லை. அங்கேயே எனக்கு சாமி ஏறிவிட்டது. ஒரு ஆட்டம் ஆடி டோக்கனை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தால் எள் போட்டால் கீழே விழாத அளவு நெருக்கியடித்துக் கொண்டு கூட்டம்.

ஒருத்தருக்காவது எதற்கு எங்கே நிற்க வேண்டும் என்று தெரியவில்லை. டோக்கன் நம்பர் எல்லாம் விசாவிற்கு வந்திருப்பவர்களுக்குத் தானாம். பாஸ்போர்ட்டுக்கு உம்மாச்சியை வேண்டிக் கொண்டு குலுக்கல் முறையில் ஒரு க்யூவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிற்க வேண்டும். கிளம்பும் போது நல்ல வேளையில் கிளம்பி இருந்தால் கரெக்டாக போய்விடலாம். இல்லாவிட்டால் பாதியிலேயே உள்ளே கவுண்டரில் இருப்பவர் தண்ணி குடிக்கவோ, மூச்சா போகவோ எழுந்து போய்விடுவார். அப்புறம் தேவுடா தேவுடா தான். விசா குத்தி பாஸ்போர்ட் வாங்குவதற்கும் ஒரு கவுண்டரில் சுரத்தே இல்லாமல் சின்னதாக ஏலம் போடுவார்கள். நீங்கள் சித்த நேரம் பராக்க பார்த்துக் கொண்டிருந்தீர்களானால் போச்சு திரும்ப கேட்டு அவர் குடுப்பதற்குள் விசா காலாவதியாகிவிடும்.

எங்கேயும் தெரிகிறமாதிரி ஒரு அறிவிப்புப் பலகை இல்லை. கிட்டப் போனால் நெஞ்சில் குத்திக் கொண்டிருப்பது மாதிரி குட்டியா ஒரு நேம் போர்டு. இருக்கிற கூட்டதில் யானைக்கு எலிக் கோமணத்தை கட்டிய மாதிரி இருக்கு. போர்டு இருக்கிறது என்று சொன்னால் தான் தெரியும்.

வேறு நாட்டு தூதரகத்திற்கெல்லாம் போனால் செக்யூரிட்டி கார்டிடம் கூட அதிர்ந்து பேச முடியாது. இங்கே ஷேர் மார்க்கெட் மாதிரி எல்லாருமே கூவி கூவித் தான் பேசவேண்டும். பாஸ்போர்ட்க்கு வெளியிலே டோக்கன் வாங்கிவிட்டோம் என்று தெனாவெட்டில் இருந்தால் ரப்பரால் அழித்துவிடுங்கள். இங்கே ஒரு க்யூ நிற்கும் அதில் நின்று தான் போகவேண்டும். அப்போ எதற்கு டோக்கன்? என்று தொலைத்து விட்டீர்களானால் க்யூவில் உங்கள் முறை வரும் போது அதை கண்டிப்பாக கேட்பார்கள். இல்லையென்றால் "ர்ர்ர்ர்ரிப்பீட்டு".

வெட்கக் கேடு ஒரு வழிமுறையே இல்லை. ஹை கமிஷனர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை ரூமில் உட்கார்ந்து கொண்டு என்னை மாதிரி ப்ளாக் அடித்துக் கொண்டிருக்கிறாரோ என்னமோ. இதை விட முருகன் இட்லி கடையில் அழகாக டோக்கன் குடுத்து நடத்துகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது வெளிநாட்டில் வெளிநாட்டினர்களுக்கு மத்தியிலா இப்பிடி மானம் போகவேண்டும்? இந்தியாவைப் பற்றி தெரியாமல் முதன் முறையாக இங்கு வருபவர்களுக்கு இப்பிடியா அறிமுகம் கிடைக்க வேண்டும்? திரு.அப்துல் கலாமிற்கு தான் எழுத வேண்டும். எந்த முகவரிக்கு எழுத என்று உங்களுக்குத் தெரியுமா? லண்டனில் மட்டும் தான் இப்பிடியா இல்லை மற்ற இடங்களிலும் இப்பிடியா என்று தெரியவில்லை.

Tuesday, November 08, 2005

சில முக்கிய முடிவுகள்...

முடிவு - 1

இன்றிலிருந்து "தமிழ் டுபுக்கு" பக்கத்திற்கு பூட்டு போட்டுவிடலாம் என்றிருக்கிறேன். ஒரே பதிவை இரண்டு தியேட்டரில் ஓட்டுவதை விட இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு தேவலாம். இதில் பின்னூட்டம் இடுபவர்கள் வேறு அங்கு இட்டுவிட்டு இங்கு வந்து காணவில்லை என்று என்னைத் திட்டுகிறார்கள். தமிழ் டுபுக்கில் அப்பிடி ஒன்னும் பின்னூட்டங்கள் பிச்சுக் கொண்டு போகவில்லை. இப்போவோ அப்போவோ ஒன்னு ரெண்டு பின்னூட்டங்கள் தான் வருகின்றன. ஆகவே தமிழ் டுபுக்கு பக்கத்தை புக் மார்க் செய்திருப்பவர்களை Dubukkuக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன். தமிழ்மணத்தில் விபரங்களை கூடிய சீக்கிரம் அப்டேட் செய்கிறேன்.


முடிவு - 2

நானும் மிகவும் பொறுமையாக இருந்து பார்த்துவிட்டேன். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? "உன்னால் முடியும் தம்பி" என்று நான் சொல்லிக்கொள்வது நிறைய பேருக்குப் பொறுக்கவில்லை (முக்கியமாக பெண்களுக்கு) . ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒன்று என்னை "உன்னால் முடியும் தம்பி" என்று ஒத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் நான் என் பெயர் அடைமொழியை "சஞ்சய் ராமசாமி" என்று மாற்றிக் கொள்வதாய் இருக்கிறேன். சீக்கிரம் யோசித்து ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள். இந்த இரண்டு பெயரில் எதுவானாலும் எனக்குச் சம்மதம். வேறு பெயர்களையெல்லாம் சொல்லதீர்கள் சொல்லிப்புட்டேன் ஆமா.

Monday, November 07, 2005

தருவியா தரமாட்டியா

தருவியா தரமாட்டியா - தரலேன்னா
உன் பேச்சுக் கா
பம்பரம் நான் விடப்போறேன் - உன்
பாவாடை நாடாவைத் தருவியா

ஆழ்ந்த சிந்தனை, அற்புதமான கருத்துக்கள், ஐய்யப் பாட்டை அகற்றும் அற்புதமான பாடல்...ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சா இப்பிடி தான் பாட்டு வரும். அடிச்சிகறதுக்கு ஆயிரம் கை போதாது. அதுவும் சரத்குமாரும் நமீதாவும் போடும் ஆட்டம் சகிக்கலை. நமீதா நாளுக்கு நாள் சைடு வாக்கில் வளர்ந்து கொண்டிருக்கிறார். இப்போவே ஹீரோக்களெல்லாம் நமீதாவை தூக்கிக் கொண்டு பாட்டுப் பாட எக்ஸ்டிரா பேட்டா கேட்கிறார்களென்று கேள்விப் பட்டேன்....என்னவோ பார்த்துக்கோம்மா அப்புறம் இந்த அண்ணா சொல்லலையேன்னு சொல்லாதே!

Wednesday, November 02, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...10

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9

லிஸ்டில் இருந்த இரண்டு பராசக்திகளை ஏற்கனவே தெரியும். தெரியுமென்றால்..எனக்கு அஸினைத் தெரியும்ங்கற மாதிரி. ரெண்டு மூனு யூத் பெஸ்டிவல்களில் பார்த்திருக்கிறேன் பேசிப் பழக்கம் கிடையாது. காலேஜில் எங்க க்ளாசில் விஷயம் பரவியிட்டிருந்தது. விழா இரண்டு நாட்கள் தொடர்ந்து என்பதால் பையன்கள் வருவதாக சொல்லியிருந்தார்கள்.

"டேய் நீபாட்டுக்கு ஒரு ஓரமா உட்கார்ந்து வாசி..வேணாம்ங்கல ஆனா நாங்க வந்திருக்கற ஜிகிடிகள கவனிக்கணும் அதனால நீ வாசிக்கறத உட்கார்ந்து பார்க்கணும்னு எதிர்பார்க்காத எங்கிருந்தாலும் எங்க கைத்தட்டு உனக்குத் தான்" - அவர்களைச் சொல்லி குற்றமில்லை அவர்கள் வயசு அப்பிடி.

விழா ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் மாலையே வரச் சொல்லியிருந்தார்கள். என்ன சட்டை போட்டுக் கொள்வது, முடியை எப்பிடி சிலுப்பி வாரிக் கொள்வது, விபூதி இட்டுக்கொண்டு போனால் பழம் என்று நினைத்துவிடுவார்களோ, எப்பிடி அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என்று எல்லாமே குழப்பமாக இருந்தது. அதுவும் பெண்கள் மெஜாரிட்டி உள்ள டீமில் வேறு இருக்கிறோம்...அதனாலேயே பயங்கர டென்ஷன். சொந்த மிருதங்கம் வார் இழுத்துக் கட்டவேண்டியிருந்ததால் வேறு ஒரு முக்கியமான இடத்தில்(எந்த இடமென்று வரும் பதிவுகளில் தெரியும்) கடன் வாங்கிக் கொண்டு ஒரு மார்க்கமாகப் போய்ச் சேர்ந்தேன். சென்னை தவிர மொத்த தமிழ்நாட்டுப் பல்கலைகழகங்களிலிருந்தும் குழுமியிருந்தார்கள். நான் கடைசி ஆளாகப் போய்சேர்வதற்குள் திருநெல்வேலிப் பசங்கள் பராசக்திகளிடம் அன்யோன்யமாகியிருந்தார்கள்.

வரி வாங்கப் போன ஜாக்ஸன் துரை மாதிரி "எங்கு வந்தாய் எதற்கு வந்தாய்" ரீதியில் தான் பசங்களிடம் வரவேற்பு இருந்தது. நமக்கு இந்தக் கழிசடைகளைப் பற்றி என்ன கவலை. பராசக்தி ஜிகிடிகள கடைக் கண் காட்டினால் போறாதோ? குலுக்கல் முறையில் ஒரு அதிர்ஷ்டசாலி ஜிகிடியைத் தேர்ந்தெடுத்து நைசாக நூல் விட்டேன். ஜொள்ளாண்டவர் கருணையே கருணை அந்த ஜிகிடி எனது அடுத்த வீட்டு நண்பியின் சினேகிதியாம். இது போறாதா...கருணைக் கதாட்சம் அமோகமாய் இருந்தது. லோகச் ஷேமத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திருநெல்வேலி நண்பர்களுக்கு முதலில் இஞ்சி தின்ற மாதிரி இருந்தது. அப்புறம் போகப் போக எல்லாருமே எல்லோருடன் பேசி பழக்கமாகிவிட்டதால் நல்லதொரு பல்லகலைக்கழகம் குடும்பமானது. என்னென்ன போட்டிகளில் யார் யார் கல்ந்துகொள்வது என்ன பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது என்று அன்றிரவு விடிய விடிய விவாதித்தோம். மொத்தத்தில் ஒரு டீமாக பெரும்பாலான போட்டிகளிலும் கலந்துகொள்ள எங்களைத் தயார் செய்துகொண்டோம். மிருதங்கம், டோலக்கு, டிரம்ஸ் என்று எனக்கு சொத்து பிரித்துக் குடுத்துவிட்டார்கள். இது போல மற்றவர்களுக்கும். டான்ஸ் மட்டும் பராசக்திகள் ஹோல்சேலில் எடுத்துக்கொண்டார்கள்.

பாட்டுக்கும் டான்ஸுக்கும் நான் தான் வாத்தியம் வாசித்தேன். பயிற்சியில் அவர்கள் ஆடும் போது ராஜா பட்ங்களில் வருவது மாதிரி "சபாஷ் சரியான் போட்டி" என்று தனியாளாக தொடையைத் தட்டிக் கொண்டு ரசிப்பதற்க்கு முந்திய ஜென்மத்த்து குடுப்பினை வேண்டும். "இல்லியே இங்க தாளம் தப்பறதே" என்று அங்கங்கே விஷயம் தெரிந்த மாதிரி பந்தா விட்டுக் கொள்வேன். ஜிகிடிகளும் எனக்கென்னவோ எல்லாம் தெரியும்ங்கற மாதிரி "இப்போ சரியா இருக்கா..." என்று திரும்ப பாடியோ ஆடியோ காட்டுவார்கள். கூட இருந்த திருநெல்வேலி பிரகஸ்பதிகளுக்கு வயத்தெரிச்சல் சொல்லி மாளாது. ஆனால் ஒன்று இவ்வளவு அன்யோன்யமாக பழகும் போது மனதில் கல்மிஷம் எல்லாம் ஓடிப் போய்விடும் எனக்கும் அப்பிடி தான் என்று சொன்னால் நீங்களும் நம்பப் போவதில்லை என் மனைவியும் நம்பப் போவதில்லை. எனக்கு இந்தப் பெண்ணை ரொம்ப நல்லாத் தெரியும்ங்கற வெத்து பந்தாக் கேஸ் தான் நான் அப்போதெல்லாம் (இப்போ அதுவும் இல்லாத பரம சாது :) ).

அடுத்த நாள் விழாவிற்கு எங்கள் கல்லூரியிலிருந்து வானரப் படை வந்திறங்கியது. நான் பராசக்தி ஜிகிடிகளோடு அன்யோன்யமாக இருப்பதை அவர்கள் பார்க்க வேண்டுமே என்று எனக்கு கவலை. இந்த மாதிரி விஷயங்களில் தெரியாதவர்களின் வயத்தெரிச்சலை விட தெரிந்தவர்கள் வயத்தெரிச்சலைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம் பாருங்கள். சங்கராபரணம் மாதிரி ஜிகிடிகள் டான்ஸ் ஆட நான் மட்டும் மிருதங்கம் வாசிக்கும் சுபலக்னத்தில் ஒரு பையனை விட்டு எல்லாரையும் கூட்டி வரச் செய்தேன். கிளம்பிய வயத்தெரிச்சலில் ஒரு ஊரே உலை வைக்கலாம்.

"டேய் எல்லாம் கரெக்டா இருக்கா...எதாவது வேணுமா...ரவையெல்லாம் இருக்கா..நான் வேணா மிருதங்கத்த கொண்டு வரட்டுமா...எதாவது ஹெல்ப் வேணும்னா கூச்சப் படாம கேளு. நம்ம காலேஜ் மானத்த காபாத்திரனும் என்ன" - எங்க டீமில் ஜிகிடிகள் இருந்ததால் காலேஜ் வானரங்கள் கூச்சமே இல்லாமல் பல்டி அடித்ததுகள்.

டீமில் ஜிகிடிகள் இருந்த்தால் மற்ற டீம் ஜிகிடிகளும் சகஜமாக பழகினார்கள். ரவை உப்புமா செய்வதற்கு மட்டுமில்லாமல் மிருதங்கம் வாசிக்கவும் பயன்படும் என்று நிறைய ஜிகிடிகளுக்கு க்ளாஸ் எடுத்தேன். ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் மாதிரி எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திரும்பிய பக்கமெல்லாம் கடலை சாகுபடி தான்.

போட்டிகளில் பட்டையைக் கிளப்பினோம். பெரும்பாலான போட்டிகளில் வென்று கேடயத்தையும் கைப்பற்றினோம். லோக்கல் யுனிவர்ஸிட்டி, பராசக்தி ஜிகிடிகள் என்பதால் சப்போர்ட்டுக்கு கேட்கவே வேண்டாம். எனக்கு தங்க முலாமில் பூசிய வெள்ளிப் பதக்கம் கிடைத்தது - கடலை போட்டதற்கு அல்ல மிருந்தங்கம் வாசித்தற்கு.

நான் தாளம் வாசிக்க பராசக்தி ஜிகிடிகள் நடனம் ஆடிய விஷயம் போட்டோவுடன் தினமலரில் வந்தது காலேஜில் என்னுடைய பராக்கிரமத்தை பரப்ப உதவியது. அதற்கப்புறம் கடலைப் பருவம் மாறி வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்கள் நிகழ்ந்தன.


--இன்னும் ஜொள்ளுவேன்

Monday, October 31, 2005

தீபாவளிப் பார்ட்டி படங்கள்!!

மொத்தம் ப்ரேமலதா அக்கா புண்யத்தில் ஐந்நூற்றுக்கும் மேலாக படங்கள். அவ்வளவையும் அவர்கள் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே சாம்பிளுக்கு சில.

"உன்னால் முடியும் தம்பி" டுபுக்கு


சக்ராவிற்கு தங்கச் சங்கிலி பரிசு

கிடார் பென்ஞ்சமின்

மஹாலிங்கம் ஜோடிக குத்து


டுபுக்கு ஜோடி குத்து

இதான் ஒரிஜினல் குத்து - சக்ரா, டுபுக்கு

சுரேஷ் ஜோடி குத்து

விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற அணி

மழலை விளையாட்டு


மற்றவைக்கு ப்ரமேலதா அக்கா ப்ளாக்கிற்கு செல்லவும். (யெக்கோவ்...ஹிட்டுக்கு இவ்வள்வுன்னு பேசின அமௌன்ட குடுத்திறனும்...சொல்லிட்டேன் ஆமா)

தீபாவளி வாழ்த்துக்கள்...!

சொன்ன மாதிரி வெள்ளிக்கிழமை பதியமுடியவில்லை. மன்னிக்கவும். வேலைப் பழு மிக அதிகமாகிவிட்டது. அதோடு தீபாவளி பார்டி வேறு. தீபாவளி பார்ட்டி மிக ஜாலியாக இனிதே நடந்தது. எல்லோருக்கும் காலேஜ் நாட்களுக்குச் சென்று வந்த நிறைவு. வலைப்பதியும் கும்பலிலிருந்து நான், சக்ரா, சுரேஷ், ப்ரேமலதா ஆகியோர் கல்ந்துகொண்டோம். மொத்தம் ஐம்பது பேர் என்று நினைக்கிறேன். பெரும்பாலோனோர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். மிக அழகான மேடை, பல மைக்குகளுடன் கூடிய அற்புதமான ஸ்பீக்கர் ஸிஸ்டம் வேறு. தனிப் பாட்டு, கிடார், கீபோர்ட், ஜோடிப் பாட்டு என்று பாட்டுக்களில் பலவகை. தனிக் குத்து, கும்மிக் குத்து, பாம்பு டான்ஸ், ஜோடி நடனம் என்று எல்லோரும் குத்து குத்துவென செம குத்து குத்தினார்கள். நிறையபேர்களை சந்தித்தேன். நிறைய எழுத வேண்டும்....பிறகு முயற்சிக்கிறேன். என்னமோ இப்போது ப்ளாகரிலிருந்து படங்கள் அப்லோட் செய்ய முடியவில்லை. சாயங்காலம் மீண்டும் முயற்சிக்கிறேன்.

மற்றபடி தீபாவளி வாழ்த்துக்கள்!!

Tuesday, October 25, 2005

அறுசுவை

போன வாரம் ரொம்ப பிஸியாக ஓடி விட்டது. வீட்டில் மனைவிக்கு உடல் நலக் குறைவு. ஐய்யா தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. குழந்தை பராமரிப்புலேர்ந்து சமையல் நேரம் வரை பார்பதற்குள் எட்டு புள்ளை பெத்த மாதிரி உடம்பு பென்ட் நிமிர்ந்துவிட்டது. பொதுவாக மனைவி சில ஸ்பெஷல் பதார்த்தங்கள் செய்தால் என்னிடம் தான் உப்பு, உரப்பு சரியாக இருக்கா என்று பார்க்கச் சொல்லுவார். இதனாலேயே எனக்கு மனதில் அறுசுவை நடராஜன் என்று நினைப்பு இருப்பதாக அடிக்கடி மரியாதை செய்வார்.

ஸ்பெஷல் பதார்த்தங்களுக்கே உப்பு உரப்பு பார்க்கும் எனக்கு சாதரண சமையலா பெரிது என்று சென்னா மசாலா செய்ய இறங்கினேன். தேவையான கிரேவி தயாரானதும் உப்பு உரப்பு ஸ்டையிலா போட்டு ஸ்பூனால் எடுத்து டேஸ்ட் பார்த்தால் ஒரே உப்புக் கரிப்பாக இருந்தது. சரி கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் விட்டு சரி பண்ணிவிடலாமென்று விட்டு விட்டு மீண்டும் சரி பார்த்தால் உப்பே இல்லை. அப்புறம் தான் மணடையில் உரைத்தது. உப்பு போட்ட ஸ்பூனாலே டேஸ்ட் பார்த்தேன் என்று. மீண்டும் கொஞ்சம் உப்பைப் போட்டு விட்டு சரி பார்த்தால் சரியாகி இருந்தது. டின்னில் இருந்து சென்னாவை போட்டு கொதிக்கவிட்டு பார்த்தால் மீண்டும் உப்புக் கரியாக இருந்தது. கடங்காரன் டின்னில் உப்புத் தண்ணியில் சென்னாவை வைத்திருக்கிறான். சரி மீண்டும் எலுமிச்சாபிஷேகா தான் என்று தெளித்ததில் மூடி சென்னாவில் உள்ளே விழுந்து ஜூஸ் பொல பொலவென சென்னாவில் கொட்டிவிட்டது. மூடியை சென்னாவில் தேடி எடுக்கும் போதே தெரிந்துவிட்டது என்ன லட்சணமாக இருக்குமென்று. கர்பஸ்தீகள் கூடத் தொடமாட்டார்கள் அப்பிடி ஒரு புளிப்பு. இருந்தாலும் தேவாமிர்தமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே முழுங்கி வைத்தேன். "உனக்கு உடம்பு சரியில்லை சென்னா மசாலா சாப்பிடக்கூடாதென்று டாக்டர் சொல்லி இருக்கார்" - மனைவிடம் வள்ளுவர் பெயரால் பொய்மையும் வாய்மையிடத்திவிட்டு சொன்ன கையோடு மிச்சத்தை ஆபிஸுக்கு எடுத்துக் கொண்டு போய் தூரப்போட்டிருக்கவேண்டாமோ...மனுஷன் சாப்பிடுவானா இத என்று மனதிற்குள் சொல்லிவிட்டு கையை வீசிக்கொண்டு சென்று பிட்ஸா சாப்பிட்டுவிட்டேன். ஆத்துக்காரர் ஆசையோடு பண்ணிவைச்சதை டேஸ்ட் பார்த்துவிட்டு "இதெல்லாம் ஒரு பொழப்பா..." என்று நேற்றெல்லாம் ஒரே புகழாரம் தான்.

மற்றபடி தீபாவளி பார்ட்டி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வருகிறவர்கள் எண்ணிக்கை 51 தொட்டுவிட்டது. இடத்திற்கு சொல்லியாகிவிட்டது, சாப்பாடுக்கு சொல்லியாகிவிட்டது. வேலைகள் மளமளவென்று நடந்துகொண்டிருக்கிறது. நான் சக்ரா பாலன் என்று கான்பரன்ஸ் கால் போட்டு நல்லா அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம். இது போக இதுபற்றி திருமதி.உமா கிருஷ்ணாவிடம் வேறு அரட்டை. பிரமேலதா பாலன், உமா கிருஷ்ணா என்று ஒரு கூட்டமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். பாட்டு, ம்யூஸிக் , நடனம் என்று ஒரே கும்மாளமாய் இருக்கிறது. நாளைக்கு விளையாட்டுக்களைப் பற்றி சொல்கிறேன். பார்டி மூலமாகவும் இந்த ப்ளாக் மூலமாகவும் புதிதாக நிறைய நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். அடுத்த ஜொள்ளித் திரிந்த காலத்தை வெள்ளிக்கிழமைக்குள் பதிந்து விடுகிறேன். அதுவரைக்கும்...

Wednesday, October 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...9

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8

வறுக்காத ரவை கேட்டதும் கண்ணாடிக் கிளி ரொம்பவே குழம்பிப் போனாள்.
"ரவையா?
"ஆமாம் கேசரி செய்வார்களே அதே ரவை"
"கேசரியா?!%?"
"ஆமாம் பெண் பார்க்க வரும்போதெல்லாம் செய்வார்களே..கேசரி"
இந்த மாதிரி விழாக்களில் பையன்கள் சகட்டு மேனிக்கு கலாய்ப்பான்கள் என்பதால் நான் அவளை கலாய்க்கிறேன் என்று முடிவே கட்டிவிட்டாள்.
"இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்..."
"ரவை வேண்டும்..வறுக்காதது"
"..." அவளுக்கு என்னத்திற்கு ரவை வேண்டும் அதுவும் வறுக்காத ரவை வேண்டும் என்று புரியவே இல்லை. நான் அவளுக்கு கேசரி செய்ய சொல்லிக்குடுக்கலாமா இல்லை மிருதங்கம் வாசிக்கும் முறை பற்றிச் சொல்லிக்குடுக்கலாமா என்று யோசிப்பதற்குள் அடியில் பற்றிக் கொண்டால் போல் ஒருவன் ஓடிவந்தான்.
"ஹீ வான்ட்ஸ் கேசரி..ஐ டொன்ட் நோ வொய்" - கிளி அவனிடம் இங்கிலீஸில் பாட்டு பாடியது.
"கேசரியா..?"
"இல்லை கேசரி செய்யற ரவை...மிருதங்கம் வாசிக்கறதுக்கு கொஞ்சம் வறுக்காத ரவை வேணும்"
"மிருதங்கத்துக்கு ரவையா... எதுக்கு?" - நான் கடலை போடுவதற்கு என்னமோ ரவை கேட்ட மாதிரி மிரட்டினான்.

கிளி கேட்டிருந்தாலாவது விலாவாரியாக சொல்லியிருப்பேன்.. இந்தத் தடியனுக்கு சொல்லிக்குடுப்பதற்கா எங்க மாமா என்னை மிருதங்கம் படிக்க வைத்தார்..

"ரவை இல்லாட்ட மிருதங்கத்தில் சரியா சத்தம் வராது. தொட்டு தொட்டுன்னு தான் வரும்"

"ஏன் தொட்டுனக்கு தொட்டுனக்குன்னு தான் வாசிங்களேன்.." - நக்கல்

தொட்டு நக்கறதுக்கு இதென்ன மாம்பழப் பச்சடியா.. கேட்டிருப்பேன் வேளைக்கு இருபது இட்லி நோகாம சாப்பிடுவது மாதிரி திடகாத்திரமாக இருந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. "இல்ல வறுக்காத ரவை கிடைக்குமா.." என்று பழைய பல்லவியையே பாடினேன்.

"எங்க காலேஜில் ரேஷன் கடையெலாம் இல்ல சாரி ஹீ ஹீ" கிண்டல் அடித்துவிட்டு கிளியைப் பார்த்து சிரித்தான். பக்கத்தில் கிளி இருந்தால் எல்லாப் பையன்களுக்கும் வரும் நக்கல் சின்டிரோம் தான். கிளியும் சுமாராய் சிரித்து வைத்தது.

"....உங்க காலேஜில் ஹாஸ்டல் இருக்குமே அங்கே மெஸ் என்று ஒன்று இருக்குமே அங்கே கேட்டால் கிடைக்கும் அதான் கேட்டேன்" - கிளி நான் கடலை பார்ட்டி என்ற சந்தேகம் போய் ஜென்டில்மேன் தான் என்று புரிந்து கொண்ட மாதிரி தெரிந்தது.

மேற்காலே போய் பீச்சாங்கைப் பக்கம் போன்னு வழிகாட்டிவிட்டான். கிளிக்கு மட்டும் "ரொம்ப தேங்ஸ்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

போகிற வழியில் எதுக்கும் இருக்கட்டும் என்று பரதநாட்டியப் பெண்களிடமெல்லாம் வறுக்காத ரவை கிடைக்குமா என்று வறுத்துக் கொண்டே போனோம். மெஸ்ஸில் ரவை கிடைத்து வாங்கிக் கொண்டுவரும் போது அந்தப் பெண்களிடம் ரவை கிடைத்து விட்டது எங்களுக்காக கஷ்டப்பட்டுத் தேடவேண்டாமென்று திருப்பியும் ஒரு தரம் வறுத்து விட்டுப் போட்டியில் வாசித்தேன். கண்ணாடிக் கிளி நான் எப்பிடி வாசிக்கிறேன் என்று பார்த்துவிட்டு கை தட்டினாள்.

இப்படியாக நான் யூத் பெஸ்டிவல் போய்வந்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டுப் பல்கலைகழங்களுக்கு இடையே நடத்தும் இன்டர் யுனிவேர்ஸிட்டி பெஸ்டிவல் நடத்தும் பொறுப்பு எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தது. இந்த விழா எங்கள் ஊருக்கு பக்கத்திலிருக்கும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடப்பதாக முடிவாகியிருந்தது. மிகவும் அருமையான இடம். பொதிகை மலையில் அமைந்திருக்கும் கல்லூரி இது. மலையில் ரொம்பவும் ஏறாமல் ஆரம்பத்திலேயே இருக்கும். கல்லூரி அமைந்த இடமே ரம்மியமாய் இருக்கும்.

போட்டி காலேஜ்களுக்கிடையே இல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடக்கும் என்பதால் எங்கள் பல்கலைக்கழக குழுவை தேர்ந்தெடுப்பதற்காக எங்கள் மாவட்ட கலூரிகளுக்கிடையே போட்டி வைத்தார்கள். அவற்றில் சிறந்தவர்களை ஒரு குழுவாக எங்கள் யுனிவர்ஸிட்டி சார்பாக பங்கேற்க வைப்பார்கள்.

இந்த இடத்தில் குற்றாலம் பராசக்தி கல்லூரி பற்றி சொல்லிவிட வேண்டும். குற்றாலம் என்றால் உங்களுக்கு அருவி நியாபகத்துக்கு வந்தால் எங்க ஊர் வயசுப் பசங்களுக்கு பராசக்தி கல்லூரி தான் நியாபகம் வரும். அவ்வளவு அருமையான கல்லூரி. பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய டீம்ட் யுனிவர்ஸிட்டி. அதுவும் எங்கள் கல்லூரி தான் அவர்களுக்கு அந்த வட்டாரத்திலேயே பக்கம் என்பதால் இரு கல்லூரிகளுக்குமிடையே இருக்கும் இணக்கம் அதிகம்.

தகுதிப் போட்டியே பலமாக இருந்தது. தகுதிப் போட்டி முடிந்ததும் உடனே முடிவை அறிவிக்காமல் ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்கிற ரீதியில் அறிவித்தார்கள். இல்லாவிட்டால் காலேஜுகளுக்குள் சண்டை வரும் என்று நினைத்தார்கள் போலும். நானும் சரி ஆச்சு அம்புட்டுத்தான் என்று வந்துவிட்டேன். போட்டி நடப்பதற்கு முந்தின நாள் வரை தகவலே இல்லை. முந்தின நாள் குண்டு வாத்தியார் க்ளாஸ் நடக்கும் போது நடுவில் வந்து நான் செலெக்ட் ஆகியிருப்பதாகச் சொன்னார். மெடல் வாங்கிவந்தால் காலேஜுக்குப் பெருமை என்று இன்னும் எதெல்லாமோ சொன்னார். எனக்கு எங்க டீமில் வேறு யார் யார் இருப்பார்கள் என்று தயக்கம். ஒருவழியாக லிஸ்டை நைசாக லவட்டிப் பார்த்தேன்.


எங்கள் யுனிவர்ஸிட்டி குழுவில் மொத்தம் பதினாறு பேர்கள். பத்து பெண்கள் - அனைவரும் பராசக்தி கல்லூரியிலிருந்து. என்னையும் சேர்த்து ஆறு ஆணக்ள். ஐந்து பேர் திருநெல்வேலி கல்லூரிகளிலிருந்து. அட்ரா சக்கை அட்ரா சக்கை...மனம் குதூகலித்தது.


--இன்னும் ஜொள்ளுவேன்



Wednesday, October 12, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...8

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7

கல்லூரி நாட்கள் பெரும்பாலும் எல்லோருக்குமே இனிமையாகத் தான் இருந்திருக்கவேண்டும். எனக்கும் தான். அதிலும் கல்லூரி நாட்களில் "யூத் பெஸ்டிவல்" என்று அழைக்கப்படும் கலை நிகழ்சிகள் நிறைந்த விழாக்களின் பெயரால் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அட்டென்டன்ஸ் விழுந்துவிடும் என்பதால் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னாலேயே பயிற்சி என்ற பெயரிலே வால்தனத்தை ஆரம்பித்துவிடுவோம். நான் பள்ளிக் காலங்களிலிருந்தே பேச்சுப் போட்டி, மிருதங்கம், டம்ப் சேரட்ஸ், அந்தப் போட்டி, இந்தப் போட்டி என்று கோட்டி பிடித்து அலைந்து கொண்டிருப்பேன். எல்லாக் கல்லூரிகளிலும் இந்த மாதிரி போட்டிகளுக்குப் போவதற்கென்றே ஒரு டீம் இருக்கும். நான் முதல் வருடம் படித்த போது எங்கள் கல்லூரியில் அந்த மாதிரி ஒருத்தரும் இல்லை. பேச்சுப் போட்டி பொறுப்பை மட்டும் ஒரு ஆசிரியர் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நச்சரித்துப் புடுங்கி ஸ்பான்சர்ஷிப்பை பேச்சுப் போட்டியிலிருந்து மெதுவாக மிருதங்கப் போட்டிகளுக்கும் விஸ்தரிப்பு செய்தேன். ஆனாலும் நான் மிருதங்கத்தை சுமந்து கொண்டு வந்தால்
"வந்துட்டியா வா..என்னடா காணோமே பார்த்தேன். இன்னிக்கு எங்கப்பா கொட்டடிக்கப் போற?" என்று எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குகிற ரீதியில் தான் பேசுவார். கொஞ்ச நாளில் பொறுப்பு இன்னோர் சங்கீத ஞானம் நிறைந்த வாத்தியார் கையில் போயிற்று. அவர் கொஞ்சம் பரவாயில்லை. கலைத்துறையில் உறுப்பினராய் இருந்ததால் போட்டிகளுக்கு போவதற்கு நிறைய ஊக்குவிப்பார். ஆனால் அவரிடம் இம்சைகள் வேறு விதமாய் இருக்கும்.

"தம்பி இன்னிக்கு நம்ம பெருமாள் கோவில்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா பாட்டுப் பாடறாங்க நல்ல பாடுவாங்க...மிருதங்கம் வாசிக்க ஒரு ஆள் வேணும்ன்னு கேட்டாங்க...நான் தான் நீயிருக்கன்னு சொல்லியிருக்கேன்...சாயங்காலம் வீட்டுக்குப் போயிடாத என்ன ..". மனுஷன் உசிர விட்டு வாசிச்சா கடைசியில் ரெண்டு தேங்காய் மூடியும், லொளு லொளு பழமும் தருவார்கள். கூடக் கொஞ்சம் சுண்டல் கிடைக்கும். மாமியிடம் தேங்காய் மூடியைக் கொடுத்தால் அடுத்தநாள் இட்லிக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி கிடைக்கும்.

இந்த தேங்காய் மூடிக் கச்சேரி அடிக்கடி நடக்காதென்பதால் பொறுத்துக் கொள்வேன். முதலில் யூத் பெஸ்டிவல்களுக்குத் தனியாக போய்க்கொண்டிருந்தேன். எல்லா யூத்பெஸ்டிவல்களிலும் கல்லூரிகளிலும் வரவேற்பதற்கும், ரெஜிஸ்டிரேஷனுக்கும் இருப்பதிலே நன்றாக இருக்கும் மூன்று பெண்களும் அவர்களிடம் கடலை போட்டவண்ணம் இரண்டு ஆண்களும் இருப்பார்கள். இவர்கள் தான் பெயர் சரி பார்த்து, பதிந்து, தங்கும் வசதிகள் பற்றி சொல்லி, அடையாள அட்டை வழங்குவார்கள். பதிவு செய்யும் போது அந்தப் பெண்களிடம் கூட இரண்டு வார்த்தை பேசிவிட்டால் அவ்வளவு தான், கூட இருக்கும் கடலைப் பார்ட்டிகளுக்குப் பொறுக்காது. நான் தனியாக போகும் காலத்தில் இவர்களிடம் ரொம்ப வைத்துக்கொள்ள மாட்டேன். ஓரமாக உட்கார்ந்து கண்ணோடு கான்பதெல்லாமோடு சரி.

இந்தப் பிரச்சனைக்காகவே கல்லூரியில் மெதுவாக யூத் பெஸ்டிவலின் அருமை பெருமைகளைச் சொல்லி ஒரு கலைக் கூட்டத்தைச் சேர்த்தேன். பெரிய கூட்டமெல்லாம் இல்லை மிஞ்சி மிஞ்சிப் போனால் மொத்தம் ஐந்து பேர் இருப்போம். ஒருத்தன் நன்றாகப் பரதநாட்டியம் ஆடுவான். ஒருத்தன் நன்றாக படம் வரைவான். மத்த ரெண்டு பேரும் உப்புக்குச் சப்பாணி கேஸ். சும்மா எதாவது ஒரு போட்டி என்ற பெயரில் வரும் பறவைகளை வாய் பார்க்க வருவார்கள். இந்த போட்டிகளுக்கெல்லாம் திருச்சி வரையிலும் உள்ள கல்லூரிகளில் இருந்து வருவார்கள். நல்ல வேளை மெட்ராஸில் இருந்து வர மாட்டார்கள். வரும் கூட்டத்தின் பந்தாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாரும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து இப்போது தான் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் வருவது மாதிரி தாங்க முடியாமல் இருக்கும். எங்கள் ஐவர் குழுவிற்கு ஃபேஷன் என்றால் வெத்தலபாக்கு வைத்து குடுக்கும் பேஸனைத்(தட்டு) தவிர எதுவும் தெரியாது. அதுவும் மிருதங்கத்தை முதுகில் சுமந்து கொண்டு ரெஜிஸ்டிரேஷனுக்கு போனாலே "கரகாட்டக்காரன்" ராமராஜன் கும்பல் வந்த மாதிரி தான் லுக்குவிடுவார்கள். இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர மாட்டோம். ஆனால் இந்த கிடார் வைத்திருக்கும் பையன்களின் அலம்பல் தாங்கமுடியாது. சேர்ந்தாப்புல நாலு பெண்கள் வந்தால் போதும் உடனே மரத்தடியில் கடையை விரித்து வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். நின்று கொண்டுவாசிப்பான், முட்டி போட்டுக்கொண்டு வாசிப்பான், தலையை சிலுப்பி விட்டுக் கொண்டு வாசிப்பான், ஆடிக் கொண்டே வாசிப்பான் - சேட்டை தாங்க முடியாது.

நானும் ஒருதரம் தில்லானா மோகனாம்பாள் டி.எஸ்.பாலைய்யா மாதிரி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு உசிர விட்டு வாசிச்சு பார்த்தேன்...ம்ஹூம் ஒன்னும் தேறல. இருக்கற பெண்கள் கூட்டமெல்லாம் கிட்டார் மரத்தடியில் தான் கூடியது. அப்புறம் நானும் ஒரு கிட்டார் பையனை ப்ரெண்டு பிடித்து அவன் கிடார் வாசிக்கும் போது கிடார் பையை கடன் வாங்கிக் கொண்டு, வெறும் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிழக்கயும் மேற்கயும் அலைந்து பொண்ணுகளிடம் கடலை தேற்றுவேன். வெறும் கிடார் பையை வைத்துக் கொண்டே அவனோட கடலை சாகுபடியை நான் கெடுக்கிறேன் என்று கடுப்பாகி அந்தப் பையன் அப்புறம் கிடார் பையைக் கடன் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.

மிருதங்கம் வாசிப்பதற்கு சில விஷயங்கள் இருக்கிறது. இதை "கொட்டு" என்று யாரவது சொன்னால் எனக்கு கொஞ்சம் கோபம் வரும். மண்டையில் கொட்டிவிடுவேன். மிருதங்கத்தின் இடது கைப் பக்கத்தில் ரவையை (உப்புமா செய்வார்களே அதே சூஜி தான்) தண்ணியில் நனைத்து கோந்து மாதிரி உருட்டி ஒட்ட வேண்டும். இது வாசிப்பதற்கு முன்னால் தான் செய்யவேண்டும். ரொம்ப முன்னாடியே ஒட்டிவிட்டாலோ , பதமாக இல்லாவிட்டாலோ சத்தம் நன்றாக இருக்காது. இதற்காகவே வறுக்காத ரவையை ஒரு சின்ன டப்பாவில் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஒரு முறை இந்த ரவை டப்பாவை மறந்து விட்டுப் போய்விட்டேன். போட்டி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் தான் கவனித்தேன். ரவைக்கு எங்கு போவது? இன்னிக்கு கோவிந்தா தான் என்று நினைத்தேன். போட்டியில் பெயர்களை ஒரு அழகான கண்ணாடி போட்ட கிளி மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தது. மிருதங்கத்தை முதுகில் தூக்கிக் கொண்டு நேர அவளிடம் போய் நின்றேன்.
"இன்னும் போட்டி ஆரம்பிக்கவில்லை...நான்...உங்கள் பெயரை கூப்பிட்டதுக்கப்புறம் நீங்க வந்தாப்.."
"இல்ல கொஞ்சம் வறுக்காத ரவை கிடைக்குமா?..."
"..."


--இன்னும் ஜொள்ளுவேன்



Monday, October 10, 2005

தீபாவளி பார்ட்டி / Diwali Party London

தீபாவளிக்கு இங்கு லண்டனில் ஒரு சந்திப்பு நடத்தலாம் என்று நண்பர்கள் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். இப்போதைக்கு நடத்தும் பொறுப்பை நான், சக்ரா, பாலன் மூவரும் பகிர்ந்துகொண்டுள்ளோம். ஏற்பாடுகள் துரிதமாக(?!) நடந்து வருகின்றது.

நாள் - 29 அக்டோபர் சனிக்கிழமை மாலை
கட்டணம் - தலைக்கு பத்து பவுண்டு (10 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது)

ஸ்வீட்லிருந்து ஆரம்பித்து வித விதமான மெனுவோடு மிகச் சிறந்த உணவு (சென்னை தோசாவிலிருந்து). ஜோடிகளுக்கு, குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு, பிரம்மச்சாரி/ரினிகளுக்கு ஜாலியான விளையாட்டுகள் என்று நான்கு மணி நேரத்தை அடுத்த தீபாவளி வரை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். யூ.கே,இங்கிலாந்து, ஐக்கிய ராச்சியம் (எல்லாம் ஒன்னு தாங்க) ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வர ப்ரியப்பட்டால் r_ramn at yahoo dot com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும் விபரங்களை அனுப்பி வைக்கிறேன். வெளியூரில் இருக்கும் அன்பர்கள் இந்த தேதியில் இங்கு வர சௌகரியப்படால் அவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

விழாவிற்கு அஸின் மட்டும் போதுமா இல்லை த்ரிஷாவையும் கூட்டிக்கொண்டு வருவதா என்று பொதுக்குழு சண்டை நடந்து வருகிறது. பாலனுக்கு நயன் தாராவும் வர வேண்டுமாம். எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டேன்.(ஆட்சேபனை எல்லாம் வூட்டுல தான் இருக்கும்). பெண்கள் ஏமாற்றமடையக் கூடாதே என்று சத்யராஜ், விஜயகாந்த்,பொன்னம்பலம், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரைக் கூட்டிக் கொண்டு வரலாமென்றிருக்கிறோம்.

Thursday, October 06, 2005

டீஜே

இரண்டு வாரங்களுக்கு முன்னால் அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருந்த போது மொபைலில் ப்ரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு.

"ஹலோ டுபுக்கா..! என் பெயர் ஷ்ரேயா...நான் உங்கள் வலைப்பதிவை ரொம்ப நாளாக படித்துவருகிறேன்...ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள் நான் உங்கள் ரசிகை..." என்ற ரீதியில் ஆரம்பித்து தொடர்ந்தது.

எனக்கு ஒரே படபடப்பு...ஓவராய் தாக்குதல் தொடர்ந்தது. என்ன பதில் சொல்லுவது..."ம்ம்ம் ஹீ ஹீ.." என்ற ரீதியில். நல்ல வேளை அன்று வெண்டைக்காய் சாப்பிட்டதால் சீக்கிரமே மண்டையில் பல்பு எரிந்து என்னோட தங்கமணி தான் ஷ்ரெயா பெயரில் குரலை மாற்றி மாட்லாடிக் கொண்டிருக்கிறதென்று புரிந்து "ஐய்யா யாரு...எங்கிட்டயேவா..." என்று தெளிவாக சமாளித்துவிட்டேன்.

இந்த வாரம் வேலைப் பார்ப்பது போல் தூங்கிக் கொண்டிருந்த போது மீண்டும் ஒரு அழைப்பு...இந்த முறை ஆண் குரல்
"ஹலோ டுபுக்கு நாந்தான் ஜே.ஜே பேசுறேன்...நாம இன்னிக்கு மீட் பண்ணலாமா " என்று நேர விஷயத்துக்கு வந்துவிட்டார். கொஞ்சம் முழித்துக் கொண்ட பிறகு தான் பேசியது டீ.ஜே என்று புரிந்தது. நேற்று சந்தித்தோம். "இந்த மாமா எல்லாரையும் பார்க்கும் போது ஆரஞ்சு ஜூஸ் பரிசளிப்பார்..இன்னிக்கு சாயங்காலம் உனக்கும் ஒன்று கிடைக்கும்" என்று மகளிடம் சொல்லியிருந்தேன். ஆனால் டீஜே ஏமாற்றிவிட்டார். ஆனாலும் ரொம்ப நாள் பழகியவர்களைப் போல் எடுத்தலிருந்தே...ரெண்டு பேரும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டோம். அவருக்கு ஆபிஸில் ஜோலியிருந்ததால் ஒரு மணிநேரம் தான் பேசினோம். ஆனாலும் இனிமையாக இருந்தது.

அம்பாசமுத்திரத்தில் எங்களுக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள் என்று டீஜே ஆரம்பித்தார்...கடைசியில் யாரென்று பார்த்தால் ஹிந்தி மாமியின் நாத்தனார். எதுக்கு வம்பு என்று உண்மையைச் சொல்லிவிட்டேன். நல்லவேளை ஹிந்தி மாமி நேரடி சொந்தமில்லையாதலால் தப்பித்தேன். இனிமே கொஞ்சம் உஷாரா இருக்கனும்பா.

லிவர்பூல் ஸ்டிரீட்டில் சென்னை தோசா இல்லாததால்...மெக்டோனால்டில் இலைதழைகளை மென்று கொண்டே பேசினோம். நான் தான் பில்லு குடுத்தேன். ப்ளாகினால் என்னென்ன செலவுகள் வரும் என்றும் தெரிந்து கொண்டேன். :)
(சும்மா டமாஸு..கோவிக்காதீர்கள் டீஜே)

(வர வர எழுத்தாளர் சாருநிவேதா மாதிரி புலம்ப ஆரம்பித்துவிட்டேன் என்று தோன்றுகிறது. சாருநிவேதா இதைப் படித்தால் கெட்ட கெட்ட வார்த்தையால் வையப்போகிறார்...சொல்லிவிடாதீர்கள் ப்ளீஸ்)

Tuesday, October 04, 2005

காயமே இது....


காயமே இது பொய்யடா வெறும்
காற்றடைத்த பையடா...



படத்திலிருப்பவர் யாரென்று தெரிகிறதா? இல்லையென்றால்..இவர் தான் நாங்கள் ஜொள்ளுவிட்ட காலங்களில் எங்களுக்கு எமனாக வந்து எம்குலப் பெண்களின் கனவைத் திருடியவர்.

எங்களைப் பற்றி கனவு காணாமல் அரவிந்த் சாமியை கனவு கண்ட எங்குலப் பெண்களே...(நீங்களெல்லாம் அனேகமாக இப்போது கல்யாணமாகி குழந்தைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்) கானுங்கள் உங்கள் கனவு நாயகனை.

(இதுக்குத் தான் நான் என்னை வெறும் கமலஹாசன் என்று சொல்லிக்கொள்வது கிடையாது .."உன்னால் முடியும் தம்பி" கமலஹாசன் என்று சொல்லிக்கொண்டால் எவ்வளவு சேஃப் பாருங்கள்)

என்னை மாதிரி ஆண்களுக்கு வயற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கும். ஆனால் எங்குலப் பெண்கள் அனேகமாக பொங்கி எழந்தாலும் எழலாம்...அதனால் வுடு ஜூட்.

பி.கு - சக்ரா இந்தப் படத்தை அனுப்பியபோது அரவிந்த் சாமியைப் பார்க்கவேஇல்லை. சொன்ன அப்புறம் தான் தெரிந்தது. ஆமா ஒரத்தில சித்திக்கு அடுத்தாப்புல இருக்கும் குட்டி யாருப்பா? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்யா கேட்கிறேன் மத்தபடி ஒன்னுமில்லை)

Friday, September 30, 2005

பாரதியார் ஓணம் அவியல் சென்னை தோசா

எனது மகளையும் , மனைவியையும் நடனப் பள்ளியில் கொண்டு விட்டு கூட்டிக்கொண்டு வருவது ஞாயிற்றுக் கிழமை ஜோலிகளில் ஒன்று. அவர்கள் ஜாலியாக ஆடப் போய்விடுவார்கள். நான் இரண்டாவது குழந்தையை...பால் புட்டியுடன் பார்த்துக்கொள்வேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் நானும் அந்தப் பள்ளியை நடத்துபவரும் (மலையாளி) அரட்டை அடித்துக்கொண்டிருப்போம்.

இந்தப் பழக்கத்தினால் இரண்டு வாரங்களுக்கு முன் அவரிடமிருந்து ஒரு எதிர்பாராத அழைப்பு. ஓணத்திற்க்காக மலையாளிகள் சங்கமும் எங்கள் கவுன்சிலும் சேர்ந்து ஒரு விழா நடத்தப் போவதாகவும், அதில் பாரதியாரின் கவிதைகளைப் பற்றி நான் பேச முடியுமா என்றும் கேட்டார். கல்லூரி நாட்களில் நிறைய பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உண்டென்றாலும், கொஞ்சம் உதறலாய் இருந்தது. ஓசிச் சாப்பாடு போடுகிறார்கள் என்று தெரிந்ததும் என்னையுமறியாமல் ஒத்துக்கொண்டேன்.

ஆரம்பித்தது வினை. "ஐய்யோ பாவம் பாரதியார்..." என்று ஆரம்பித்து மனைவி சொல்லிச் சொல்லி என்னை ஓட்டியது சொல்லி மாளாது.
"ப்ரிப்பேர் பண்ணியாச்சா? எங்கே ஒரு தரம் சொல்லுங்கோ பார்போம்" - தோசைக்கு ஒருதரம் துவையலுக்கு ஒருதரம் என்று பரீட்சை எழுதும் பத்தாம் கிளாஸ் மாணவன் மாதிரி நான் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா.

பாரதியார் என் ஃபிரண்டில்லை...நான் அவரைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று தெரிந்ததும் என் மகள் வர்ஷாவிற்கு "Ohhh that will be funny..." என்று சிரிப்போ சிரிப்பு.... என் மனைவி இது போறாது என்று பக்கத்திலிருந்த இன்னொரு தமிழ் ஜோடியிடம் சொல்ல அவர்களும் நான் பேசுவதைப் பார்க்க ஆர்வமாகி வருவதாகச் சொன்னார்கள்.

இங்கே பிரேமலதா பாலன் தம்பதியினரைப் பற்றிச் சொல்லவேண்டும். இந்த ப்ளாக் மூலமாக கிடைத்த இனிமையான நண்பர்கள். அவர்களுடன் போன வாரம் முதன் முதலில் தொலைபேசியில் பேசிக் கொன்டிருந்த போது நான் இதுபற்றி லேசாக உளறிவிட...அவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு கண்டிப்பாய் வருவதாய் சொன்னார்கள். தனியாக சொதப்பினாலாவது வெளியே தெரியாது. இப்பிடி எல்லாரையும் கூட்டிவைத்துக்கொண்டா சொதபுவது. அதுவும் முதல் சந்திப்பு இப்பிடி டென்ஷனிலா நடக்கவேண்டும் - எனக்கு உள்ளூர ஜுரம் ஏறிக்கொண்டிருந்தது.

நிகழ்ச்சிக்குப் போய் பார்த்தால் முழுவதும் சேட்டன்களும் சேச்சிகளுமாய் இருந்தார்கள். "என்ன சுகந்தன்னே.." என்று பட்டு உடுத்திக் கொண்டு விளித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் ஜீன்ஸ் பேண்டும் காட்ராய் சட்டையும் போட்டுக் கொண்டு பரட்டைப் பாண்டியாய் பாரதியார் கவிதைகளைப் பற்றி பேச நான். வீடியோ காமிராவை கொண்டு எடுத்துவிட்டால் அதை வீட்டில் போட்டு போட்டு கேலிச் சிரிப்பு சிரித்து எனக்கு மரியாதை செய்வார்கள் என்பதால் நைஸாக வைத்துவிட்டு வந்துவிட்டேன். நல்ல வேளை பிரேமலதா பாலனும் கொண்டுவரவில்லை. என்னைத் தவிர மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் பாட்டு, நடனம், கச்சேரி என்று கலை நிகழ்ச்சிகள். ஜலதோஷம் பிடித்து மூக்கு ஞொண ஞொண என்று இருந்தது. இன்னும் கொஞ்சம் மூக்கால் பேசி மலையாள வாடையில் பேசி பாரதியாரை காப்பாற்றி விட்டேன். ஒருவர் என்னை போட்டோ வேறு எடுத்தார். (புதுசா ஃப்லிம் மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். முதல் போட்டோ வருமோ வரதோ என்று என்னை வைத்து திருஷ்டி கழித்திருக்கலாம்). நான் பேச ஆரம்பித்தது சில வயசான சேட்டன்களுக்கும், இன்னும் சில பேருக்கும் "சூச்சா" போய்விட்டு வருவதற்கு வசதியாக இருந்தது.

முடிவில் சோறு போடுவார்களென்று காத்திருந்தால்...பரிமாறுவதற்கு உதவிக்கு கூப்பிட்டார்கள். பாயாசம், ரசம், சாம்பார், உருளைக்கிழங்கு கறி, முட்டைகோஸ் கறி என்று பிரமாதப் படுத்தியிருந்தார்கள். மலையாள அவியல் வாசனை மூக்கைத் துளைத்தது. நானும் பாலனும் பரிமாறும் கூட்டத்தில் சேர்ந்துகொண்டோம். வந்திருந்த கூட்டத்துக்கு இந்த சாப்பாடு காணாது என்று கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது. நமக்கு கடைசியில் கிடைக்காது என்று தெரிந்தும் பசியில் இன்முகத்தோடு சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் அள்ளிப் பரிமாறியது விளக்கெண்ணயும் தேனும் கலந்து குடித்த மாதிரி இருந்தது. கடைசியில் காக்காய்க்கு போடுவது மாதிரி கொஞ்சம் சோறும் ரசமும் மட்டும் கிடைத்தது. பாரதியார் புண்ணியத்தில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தோம். ஆனால் அடுத்த நாள் பாரதியார் கைவிடவில்லை. பாலன் பிரமலதாவைக் கூட்டிக் கொண்டு சென்னை தோசா சென்று முந்தின நாளுக்கும் சேர்த்து ஒரு கட்டு கட்டினோம். நான் தான் பில்லு கொடுப்பேன் என்று முதலிலேயே பிட்டு போட்டு வத்திருந்தாலும் கடைசியில் "நான் குடுப்பேன்.. நீ குடுப்பேன்னு" பில்லு குடுப்பதற்கு நாடகம் நடத்தி கடைசியில் பாலன் தான் காசு குடுத்தார். சாப்பிட்ட சாப்பாடு கூடக் கொஞ்சம் இனித்தது. மனுசன் ரொம்ப வெள்ளந்தியாக இருக்கிறார். ப்ளாக் எழுதுவதாலும், பாரதியாராலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நன்றாகத் தெரிந்தது.

அடுத்த வாரம் யாராவது வீட்டுக்கு வர்றீங்களா? சென்னை தோசா போகலாம்...பில்லு நான் தான் குடுப்பேன் சொல்லிட்டேன் ஆமா...

Friday, September 23, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...7

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6

கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்தது. அடுத்த நாள் தான் மண்டபத்துக்குப் போவதாக ஏற்பாடு. தெருவில் இரண்டு வீடுகளை வாடைக்கு எடுத்திருந்தார்கள். நான், மெட்ராஸ், மற்றும் இன்னும் ரெண்டு பேரும் செட் சேர்ந்தோம். மெட்ராஸ் நல்ல கலகலப்பாகப் பழகினான். ராத்திரிக்கு தண்ணியடிக்க அழைத்துப் போவதாய் அன்பாகச் சொன்னான். பழக்கமில்லை என்றவுடன் கலாய்க்காமல் பண்பாக விட்டுவிட்டான்.நல்ல பையனாகத் தான் தெரிந்தான்.

பம்பாயும் அவளைவிட கொஞ்சம் வயது குறைந்த இன்னும் இரண்டு குட்டிகளும் செட்டு சேர்ந்திருந்தார்கள். என்னமோ பேசி க்ளுகென்று அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தனர். அன்று மதியம் நான் இந்தப் பக்கம் போய் மோர் குடித்துவிட்டு வருவதற்குள் மெட்ராஸ் நைஸாக நூல்விட்டு கடலை வறுக்க ஆரம்பித்திருந்தான். நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயட்டுமே என்று நானும் சேர்ந்து கொண்டேன். என்ன இருந்தாலும் மெட்ராஸ் மெட்ராஸ் தான்! ஹிந்தியெல்லாம் பொளந்து கட்டினான். என்னோட ஹிந்தி மாமி அவ்வளவு தூரம் சொல்லிக் குடுக்கவில்லையாதலால் நானும் கச்சேரிக்குப் போனேன்ங்கிற ரீதியில் சும்மா அச்சா குச்சா என்று ப்ரவேஷிகா ஹிந்தியில் ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தேன். நல்லவேளை ரொம்ப நேரம் ஜால்ரா போடவேண்டிய அவசியமில்லாமல் பம்பாய் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டது. சும்மா அறிமுகம் தான் படுத்திக்கொண்டார்கள் என்பது புரிந்தது.

மெட்ராஸ் இருக்கும் போது பம்பாய் முன்னால் என்னால் ஷோபிக்க முடியாதென்று நன்றாகப் புரிந்தது. பம்பாய் ஐம்பதாயிரம் கலர் பட்டுப்புடவை ஜோதிகா மாதிரி அடிக்கடி ட்ரெஸ் மாற்றிக்கொண்டிருந்தாள். மெட்ராஸ் இதெல்லாம் அவனுக்காகத் தானென்றும், நான் எனக்காத் தான் என்றும் நினைத்துக் கொண்டோம். பம்பாய் நல்ல பதவிசாகப் பழகினாள். மெட்ராஸ் அடிக்கடி எதாவது சொல்லிக்குடுத்துக் கொண்டிருப்பான். பம்பாய் ஜன்னல் வைத்த சட்டை போட்டுக் கொண்டுவந்தால் வாஸ்து சொல்லுவான், பஜ்ஜியும் சொஜ்ஜியும் தின்று விட்டு ஜோக் அடிப்பான், பாட்டு பாடுவான். எனக்கு வெறும் காத்து தான் வரும். கூடவே காதிலிருந்து புகையும் வரும். "சுகப் பிரசவம் பார்பது எப்பிடி" என்பது தவிர கிட்டத் தட்ட எல்லா விஷயங்களையும் மெட்ராஸ் தெரிந்து வைத்திருந்தான். பம்பாய்க்கு என்மேல் ஒரு "இது" என்ற நம்பிக்கை வெகு சீக்கிரத்தில் புஸ்ஸாகிப் போனது.

கல்யாணங்களில் களை கட்டுவதே இரவு நேர அரட்டைக் கச்சேரிகள் தான். வெத்தலை போட்டுக்கொண்டு சில மாமாக்கள் அடுத்தாத்து மாமிகள் முன்னால் பிரதாபங்களை அளந்து விட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருபக்கம் பட்டுப் புடவை மாமிகள் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் இந்த முப்பதிலிருந்து நாற்பது வரை உள்ள அக்கா மாமிகளின் அரட்டையிருக்கிறதே...எஸ்.ஜே.சூர்யா ரகம். ஒரு தடவை காது குடுத்துக் கேட்டேன்...அடேயப்பா....ஆம்பளைகளையும் மிஞ்சி விட்டார்கள்.காதைப் பொத்திகறதுக்கு பத்து கைவேண்டியிருந்தது. சை என்று ஆகிவிட்டது. அதிலிருந்து இப்பொதெல்லாம் கல்யாணத்திற்கு போனால் இவர்கள் அரட்டையை மிஸ் பண்ணுவதே கிடையாது.

"அந்தாக்க்ஷரி" இல்லாத கல்யாணமும் கல்யாணமா? பம்பாய் அண்ட் கோ "அந்தாக்க்ஷரி" என்ற பாட்டுக்குப் பாட்டு விளையாட்டு ஆட ஆரம்பித்திருந்தார்கள். இத இத இதைத் தானே எதிர்பார்த்தோம். உடனே கூட்டத்தோடு கோவிந்தாக்களாய் நாங்களும் ஐக்கியமானோம். இந்த மாதிரி விளையாட்டுக்களில் வடகத்திய கூட்ட தொல்லை தாங்கமுடியாது. "சிந்தகி", "சப்னே", "மொஹபத்", "இஷ்க்" - இப்பிடி எதாவது வரும் ஹிந்தி பாட்டைப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். ஹிந்தி ப்ரவேஷிகா பரீட்சையில் எனக்கு இந்த மாதிரி சினிமா பட்டெல்லாம் சொல்லிக்குடுக்கவில்லை. என்னுடைய சுய ஆர்வத்தால் "சாரே ஜகான்சி அச்சா " மட்டும் ரெண்டு வரி தெரியும். கூட இருந்த ரெண்டு தீவட்டிகளுக்கு அதுவும் தெரியாது. இருந்தாலும் மெட்ராஸோடு சேர்ந்து கொண்டு கோவிந்தா பாட்டு பாடி ரொம்ப நாறாமல் சமாளித்தோம். முந்தின பாட்டிலிருந்து சில கீ வேர்ட்ஸ் நியாபகம் வைத்துக் கொண்டு அடுத்த அடுத்த கோவிந்தா பாட்டில் பாடுவோம். மிச்சத்தை மெட்ராஸ் பார்த்துக் கொள்வான்.

பம்பாய்க்கும் மெட்ராஸ்க்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டேவந்தது. மண்டபத்துக்கு வந்த பிறகு ரெண்டுபேரும் திடீர் திடீரென்று காணமல் போய்விடுவார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் கடலை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஹிந்தி படித்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு ஆர்வம் பிறந்ததே இப்பிடித் தான். காசியாத்திரை, ஊஞ்சல் என்று எல்லா இடங்களிலும் மெட்ராஸ் பம்பாய் பின்னாடியே மோப்பம் பிடித்துக்கொண்டு போனான்.


கல்யாண வீடுகளில் அரட்டை அடித்து அடித்து களைத்துப் போய் மதியம் இரண்டு மணிக்கு ஒரு தூக்கம் வரும் பாருங்கள்...ஒன்னு ரெண்டு டயாப்டீஸ் மாமாக்களைத் தவிர மண்டபமே தூங்கிப் போகும். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கனவில் பம்பாயில் ஹிந்தி மாமியோடு "ருக் ருக் ருக்" பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டு பிரவேஷிகா பரீட்சையில்...இந்தியாவிலேயே முதல் மாணவனாய்த் தேறி ராஷ்டிரபதி என் நெஞ்சில் பதக்கமும் குத்தி ஹிந்தி மாமியையும் கல்யாணம் பண்ணிவைத்த அந்த வேளையில்...மெட்ராஸும் பம்பாயும் எங்கேயோ கடலை சாகுபடி செய்துகொண்டிருந்தார்கள். ஹிந்திமாமியோடு குடித்தனம் நடத்த பிடிக்காமல் நான் முழித்துப் பார்த்தபோது...ஒரு மூலையில் மெட்ராஸும் பம்பாய் கையையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அதற்கப்புறம் கொஞ்சம் நேரத்தில் இருவரும் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.

அன்று சாயஙகாலம் நாங்கள் புறப்பட வேண்டியிருந்ததலால் மெட்ராஸ் பம்பாய் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மெட்ராஸ் கண்ணைச் சிமிட்டி அவனுக்கு பம்பாய் தான் இனிமே எல்லாம் என்றான். வாழ்கைக்கு ஹிந்தி எவ்வளவு பிரயோஜனப் படும் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் அதற்கப்புறம் அவர்களை நான் பார்க்கவே இல்லை. இரண்டு வருடங்கள் முன்னாடி விசாரித்ததில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன் - அவா அவா கணவன் மனைவியோட !

--இன்னும் ஜொள்ளுவேன்




Use this --> Comments(#)

Monday, September 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...6

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5

திருமண வைபவங்கள் மிகவும் குதூகலமானவை. அதுவும் நெருங்கிய சொந்த வட்டங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி குஷி. சிறுவர் சிறுமியர்க்கு ஸ்கூலுக்கு லீவு, அப்பா அம்மா கண்டுகொள்ள மாட்டார்கள் விளையாடிக் கொண்டே இருக்கலாம். அப்பாக்களுக்கு அரட்டை அடிக்கலாம், அம்மாக்களுக்கு பிக்கல் பிடுங்கல் கிடையாது. சமைக்க வேண்டாம், வேளா வேளைக்கு வித விதமாக நகையும் உடையும் அணிந்து கொண்டு ஆற அமர அரட்டை அடிக்கலாம். டீனேஜ் பயன்களுக்கும் கல்யாணமாகத பிரம்மச்சாரிகளுக்கும் மட்டும் கொஞ்சம் ரெண்டுங்கெட்டானாய் இருக்கும். சரியான செட் அமையாவிட்டால் போர் அடிக்கும். செட் அமையாவிட்டாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பெண் வீட்டு சொந்தமோ, பையன் வீட்டு சொந்தமோ இருந்துவிட்டால் போதும். மனதில் ஒரு கிளுகிளுப்பு வந்து விடும். அவள் பார்ப்பாளே என்று கூட கொஞ்சம் ஷோக்காய் ஆடை அணிந்து கொள்ள ஆர்வம் பிறக்கும்.

இப்படி ஈடுபாடு இல்லாமல் ஓரளவு நெருங்கின சொந்தத்தில் ஒரு கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னதாகவே போக வேண்டியிருந்தது. பாட்டிகளும் மாமாக்களும் மாமிகளும் சேர்ந்து நடத்தும் மாநாடு மாதிரி இருந்தது.

"ஏண்டியம்மா இந்தப் பச்சைக்கல் நெக்லெஸுக்கு தோதா ஒரு மூக்குத்தி வாங்கித் தரச் சொல்லப்பிடாதோ உன் ஆம்படையான?" - கவலையே படாமல் பாட்டிகள் ஆம்படையான்களுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆம்படையான்கள் இது பற்றி கொஞ்சமும் தெரியாமல் "ஏண்டா அடுத்தாப்புல என்ன படிக்க போற? இந்தக் காலத்துல எவ்வளவு படிச்சாலும் காணாது பார்த்துக்கோ.." என்று எனக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்கள்.

பூச்சாண்டிகளை விட பாட்டிமார் கூட்டமே எவ்வளவோ தேவலை என்று அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்ட போது தான் அவள் வந்தாள். எங்கள் ஊர் பக்கம் பெண்களெல்லாம் நன்றாக இருப்பார்கள். அதுவும் கல்லிடைக்குறிச்சியில் தெருவுக்குத் தெரு பஞ்சமே இருக்காது. என்ன கொஞ்சம் துடுக்குத்தனம் ஜாஸ்தியா இருக்கும் (ஹி ஹி...அம்மாடி நீ அப்பிடி கிடையாது நேக்குத் தெரியும்). இவளைப் பார்த்த போது கல்லிடைக்குறிச்சிக் களை தெரியவில்லை. அதையும் தாண்டி அழகாக இருந்தாள். இந்த ஷாம்பூ விளம்பரங்களில் ரெண்டு நிமிஷம் வந்து மனதைக் கொள்ளை கொள்வாளே அந்த மாதிரி பளிச்சென்று இருந்தாள். மார்டனாகவும் இருந்தாள். அன்றைக்கு எனக்கு கன்னி ராசி தூக்கலாக இருந்திருக்கவேண்டும். நேர நான் வம்பளந்துகொண்டிருந்த பாட்டியிடம் வந்து கட்டிக்கொண்டாள் (பாட்டியைத் தான்...) குடுத்து வைத்த பாட்டி. பாட்டி ஷேம லாபங்களை விசாரித்தலிருந்து பார்டிக்கு பம்பாய் என்று தெரிந்தது. (ஆல் இன்டியா லெவெலில் ஜொள்ளாட்டா ஜென்மம் சாபல்யம் அடையுமோ). பம்பாயும் பெங்களூர் லிஸ்டில் அன்று சேர்ந்துகொண்டது. கொஞ்ச நேரம் பாட்டியிடம் பேசி விட்டு பம்பாய் வேறு பாட்டியைக் கட்டிக்கொள்ள கிளம்பிவிட்டது. (ஹூம் பேசாம பாட்டியா பிறந்திருக்கலாம்).

பம்பாய் கலகலவென்று எல்லாரிடமும் பேசிக் கொண்டே தென்றலாய்த் தவழ்ந்தாள். இப்பிடி நான் பாட்டுக்குத் தேமேன்னு பம்பாயைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் அந்த வில்லன் வந்தான். சிரித்துக் கொண்டே அறிமுகப் படுத்திக்கொண்டான். புள்ளையாண்டன் மெட்ராஸிலிருந்து வந்திருந்தான். "என்ன அந்தப் பெண்ணை ரொம்ப லுக்கு விடறே? பிடிச்சிருக்கோ? " முகத்துக்கு நேர கெட்டவுடன் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன். "அப்பிடியெல்லாம் இல்லை....அவ முகத்தை எங்கியோ பார்ர்தமாதிரி இருந்துது அதான் யோசிச்சிண்டிருக்கேன்...ஏன்?" சரளமாக வாயில் வந்தது.

"நல்லா இருக்கா இல்ல...ட்ரை பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன்" மெட்ராஸில் சிக்கந்தர் ஒப்பந்தம் பிரபலம் இல்லை போல. நேர பட்டா பண்ணி எடுத்துக் கொண்டான்.

"புரியறது. ம்...நீ நடத்து ராசா".

ஜொள்ளு விடுவது திங்கள்கிழமை காலைத் தூக்கம் மாதிரி. எழுந்திருக்க மனசே வராது. இனிய இம்சை. ஆனால் ஜொள்ளுவிடுவதைப் பக்கத்திலிருந்து பார்பது என்பது ஒன் டே கிரிக்கெட் மாட்சைப் பார்பது மாதிரி. விறுவிறுப்பாக இருக்கும். இப்பிடி விளையாடு அப்பிடி விளையாடு என்று சகட்டு மேனிக்கு வாரி வழங்கலாம். சொதப்பிட்டியேன்னு அங்கலாய்க்கலாம். ஜெயிச்சாலும் தோத்தாலும் காரணங்களை அலசிப் பொழுதைப் போக்கிக் கொள்ளலாம். மொத்ததில் நேகாமல் நொங்கெடுத்த திருப்தி கிடைக்கும்.

மெட்ராஸ் Vs பம்பாய் மேட்ச்சும் இப்பிடித் தான் விறுவிறுப்பாக இருந்தது.


--இன்னும் ஜொள்ளுவேன்




Use this --> Comments(#)